குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ’சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய’த்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளின் உதவியுடன் ஏவப்பட்டுள்ளன.  தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.

சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்தது.  கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள இடத்தில் இருந்து வளிமண்டலத்தை ஆய்வு செய்ய ’ரோகிணி’ என்ற சிறிய வகை ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ திட்டமிட்டபடி, அந்த ராக்கெட் 75.24 கி.மீ உயரத்தை எட்டி 121.42 கி.மீ தூரம் சென்று கடலில் விழுந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது குலசேகரன்பட்டினத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள 2200 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தை சுற்றி கருங்கற்களால் தரமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போல ராக்கெட் ஏவுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு மணல்கள் அனைத்தும் சமன் செய்யப்பட்டு பெட் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

இது தவிர உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டுமான வசதிகளும் துரிதமாக நடந்து வருகிறது. மேலும் ராக்கெட் லான்ச் செய்வதற்கு சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லான்ச் காம்ப்ளக்ஸ்சும் இந்த இடத்தில் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட் ஏவுவதற்காக வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.