Kamal: “கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை; தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் வந்தது” – கே.என்.நேரு

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் தக்ஃலைப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தபடம் நாளை (ஜூன் 5 ஆம் தேதி) வெளியாக உள்ள நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் இசைவெளியீடு விழா நடைபெற்றது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

அதில் பேசிய கமல் தமிழ் மொழியில் இருந்துதான் கன்னட மொழி உருவானதாக கன்னட நடிகர் சிவராஜ் குமார் முன்னிலையில் மேடையில் கூறினார்.

இவரது பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கமலின் இந்த பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதற்கு கமல் மறுப்பு தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கர்நாடகவில் கமல் நடித்த தக்ஃலைப் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்றும் தங்களுடைய எதிர்ப்பை மீறி திரையங்குகளில் கமல் படத்தை வெளியிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) விதித்த தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது.

கே.என் நேரு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? என கேள்வி எழுப்பி, அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் விவகாரம் முடிந்திருக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம் கமல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “கன்னட மொழி குறித்து கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை. தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் வந்தன” என்று கூறியிருக்கிறார்.