பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் சிலையை கடத்தி, ரஷ்ய தூதரகம் முன் நிறுத்திய போராளிகள்.. என்ன செய்தார்கள்?

பாரிஸில் உள்ள கிரேவின் அருங்காட்சியகம் பிரான்ஸின் மிகவும் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்று. 1882-ல் திறக்கப்பட்ட இது, வரலாறு, அரசியல், விளையாட்டு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும், அல்லது பிரபலமாக இருக்கும் முக்கிய நபர்களின் மெழுகு சிலைகளைக் காட்சிப்படுத்துகிறது.

அதன் அடிப்படையில், சிற்பி கிளாஸ் வெல்டே என்பவரால் வடிவமைக்கப்பட்ட பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மெழுகு சிலை, 2018-ல் நிறுவப்பட்டது. இந்த நிலையில், கிரேவின் அருங்காட்சியகத்திலிருந்து திங்களன்று இம்மானுவேல் மக்ரோனின் மெழுகு சிலை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான தகவலில், கிரீன்பீஸ் ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் மூன்று நபர்களால் இந்த சிலை திருடப்பட்டதை காவல்துறை வட்டாரம் உறுதி செய்திருக்கிறது.

AFP செய்தி நிறுவனம் வழங்கியிருக்கும் தகவலின்படி, இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அருங்காட்சியகத்திற்குள் சுற்றுலாப் பயணிகளாக நுழைந்து, அவசர கதவு வழியாக அந்த சிலையுடன் வெளியேறியிருக்கின்றனர்.

மேலும், ரஷ்யாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு கொள்கை தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சிலையை பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரக கட்டிடத்திற்கு கொண்டு சென்று, மெழுகு சிலைக்கு அருகில் ரஷ்ய கொடியை ஏற்றி, அந்த ஒப்பந்தத்துக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை வைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த சம்பவம் பாரிஸ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.