அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: `ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறையாத ஆயுள் தண்டனை’ – தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

ஞானசேகரன்
ஞானசேகரன்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.

சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது, நன்னடத்தை காரணமாக வெளியே வர இயலாது என்ற நிபந்தனைகளுடன், ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி.

சட்டப்பிரிவுகளின் படி, ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம்:

329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடந்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை

126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – ஒரு மாதம் சிறை.

87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்.

127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1 ஆண்டு சிறை.

75(2) – விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் – 3 ஆண்டுகள்

76 – கடுமையாக தாக்குதல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

64(I) பாலியல் வன்கொடுமை – 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள்; ரூ.25,000 அபராதம்.

351(3) கொலை மிரட்டல் விடுத்தல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்; 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் – 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம்.