மொழி விவகாரம்: “தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது; மொழியில் சர்ச்சைகள் வேண்டாம்” – அன்புமணி

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது தற்போது அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் கமல்ஹாசனுக்கு தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.” தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

மேலும், கர்நாடகாவிலுள்ள எதிர்க்கட்சியான பாஜக-வும் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.

கமல்ஹாசன் - சிவராஜ்குமார்
கமல்ஹாசன் – சிவராஜ்குமார்

அதேசமயம், விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில், வரலாற்று மொழியியல் வல்லுநர்கள் தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்றைக்கு கன்னடம் மலையாளம் பேசக்கூடிய மக்கள் அந்த உண்மையை ஏற்கத் தயங்கலாம். ஆனால், வரலாறு வரலாறுதான் உண்மை உண்மைதான்.

அதை எவரும் மறுக்க முடியாது. தமிழிலிருந்து பிற மொழிகள் சமஸ்கிருத கலப்பால் உருவாகியிருக்கின்றன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மை.” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி
அன்புமணி

தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.

உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னை தமிழ்தான்.

தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது. கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன.

எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும்.

அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.” என்று எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.