‘மாணவர்களாக மட்டும் இருங்கள்; மீறினால்…’ – வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அரசு கட்டளை!

நாளுக்கு நாள் வெளிநாட்டு மாணவர்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் காட்டும் அதிரடிகள் அதிகரித்து கொண்டே போகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம், “அமெரிக்க அரசிற்கு எதிராகவும், அதன் கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தும் வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது தங்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள்” என்று கூறியது அமெரிக்க அரசு.

அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டம் உள்ளிட்ட அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்ததால், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் அரசு நிதி நிறுத்தப்பட்டது. இனி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேரும் அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்
ஹார்வார்டு பல்கலைக்கழகம்

இந்த ஆண்டோடு படிப்பு முடிபவர்களைத் தவிர, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள வேறு கல்வி நிறுவனங்களில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

“கல்வி நிறுவனங்களிடம் முன்னரே தெரிவிக்காமல், படிப்பைப் பாதியில் நிறுத்துவது, வகுப்புகளுக்கு செல்லாமல் இருப்பது, பாடப்பிரிவில் இருந்து மாறுவது என இனி இருக்கக்கூடாது. மீறினால், அவர்களுக்கான மாணவர் விசா ரத்து செய்யப்படும்.

எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்கா விசாவைப் பெறுவதற்கான தகுதியை இழப்பார்கள். அதனால், விசாவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள் மற்றும் மாணவராக இருப்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்னைகளிலும் ஈடுபடாதீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இது இந்திய மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லை. அமெரிக்காவில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூறப்பட்டுள்ளது.