உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை… அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2011 முதல் ஜனனி ஷிஷு சுரக்ஷா காரியக்ரம் (JSSK) போன்ற திட்டங்களை அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் நோக்கம் கர்ப்பிணிகளுக்கு இலவச மற்றும் பாதுகாப்பான பிரசவ சேவைகளை வழங்குவதும், அதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைப்பதாகும். ஆனால், அந்தத் திட்டங்கள் வெறும் பெயரளவில், காகிதத்தில் மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியுடன் வந்திருக்கிறார். ஆனால் மருத்துவமனையில், ஒரு மருத்துவரோ, செவிலியரோ இல்லை. அவ்வளவு ஏன் படுக்கை வசதியைக்கூட காணவில்லை. வேறு வழியே இல்லாமல் தரையில் அமர்ந்து தன் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அரசின் திட்டங்கள் என்னவானது எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இத்தனைக்கும், பாலியா மாவட்டத்தில் உத்தரப்பிரதேச அரசின் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் மாவட்டத்தின் சுகாதார சேவைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள்கூட கிடைக்காத நிலையில், இந்தத் தலைவர்கள் தங்கள் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.