ஸ்டார்ட்அப் மட்டுமே பொருளாதாரம் அல்ல… எம்.எஸ்.எம்.இ துறையையும் கொஞ்சம் கவனியுங்கள் மன்னர்களே!

இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியான சிட்பி (Sidbi), கிரிசில் இன்டெலிஜன்ஸ் அமைப்புடன் இணைந்து ஆய்வு அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், எம்.எஸ்.எம்.இ (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்) துறையில் நீண்டகாலமாகத் தொடரும் பிரச்னைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

எம்.எஸ்.எம்.இ துறைக்கு சுமார் ரூ.30 லட்சம் கோடி அளவிலான கடன் தேவை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. இது, மொத்தக் கடன் தேவையில் 25 சதவிகிதம். இதற்கு முக்கிய காரணம், அரசாங்கத்தின் கடன் திட்டங்கள் முறையாக சம்பந்தப்பட்ட துறையின் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோர் களுக்கும் போய்ச் சேரவில்லை. இதனால் சிறுதொழில்கள், அதிக வட்டிக்குத் தனியார் கடன்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் உண்டாகிறது.

இந்த நிறுவனங்களுக்குத் தேவையான திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதிலும் சிக்கல் தொடர்கிறது. உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் இவை பின்தங்கி இருக்கின்றன என்றெல்லாம் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், போட்டிகளைச் சமாளிக்க முடியாமலும், சந்தையைப் பிடிக்க முடியாமலும் பல எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் திணறுவதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 6.2 கோடி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் ஜி.டி.பி-யில் 30%, உற்பத்தித் துறையில் 45%, மொத்த ஏற்றுமதியில் 40%, 11 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு என இவை முன்னிலை வகிக்கின்றன. பெண்கள் சொந்தமாக நிர்வகிக்கும் நிறுவனங்கள் 35% வரை உள்ளன என்பதும் இத்துறையின் பெருமையே. இப்படி எல்லா வகையிலும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் எம்.எஸ்.எம்.இ துறையில் பற்பல பிரச்னைகள் நீண்டகாலமாகத் தொடர்வது கவலைக்குரியதே.

மத்திய மற்றும் மாநில அரசுகள் எல்லாமே, இப்போது பிரபலமாக இருக்கும் ஸ்டார்ட்அப் கலாசாரத்தில் அக்கறை செலுத்தும் அளவுக்கு, எம்.எஸ்.எம்.இ துறையில் அக்கறை செலுத்தத் தவறுகின்றன. நிச்சயமற்ற தன்மை அதிகம் உள்ள சேவைத் துறை, ஸ்டார்ட்அப் துறைகளுக்கு அதிக அக்கறை காட்டும் அரசுகள், அதே அளவு அக்கறையை எம்.எஸ்.எம்.இ துறைக்கும் காட்ட வேண்டும்.

தமிழ்நாடு சுமார் 6.89 லட்சம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுடன் நாட்டிலேயே முன்னிலை மாநிலமாக உள்ளது. ஏற்கெனவே பல விஷயங்களில் முன்னிலை மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல்… நிதி ஒதுக்கீடு, சரியான வழிகாட்டுதல் என்று எம்.எஸ்.எம்.இ துறையை வளர்த்தெடுக்க முன்வர வேண்டும்.

இந்தியாவின் கனவான 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், தமிழ்நாட்டின் கனவான ஒரு டிரில்லியன் டாலர் பொருளதாரம்… இவையெல்லாம் நனவாக, எம்.எஸ்.எம்.இ துறைக்குச் சரியான கவனம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

– ஆசிரியர்