மதுரை அழகர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 3 ஆம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்கோயிலிலிருந்து தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு வந்தார் கள்ளழகர்.

4 ஆம் நாள் நிகழ்வாக கள்ளழகரை புதூர் மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.
5 ஆம் நாள் நிகழ்வாக தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.
பின்னர், நேற்று முன்தினம் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மண்டூக மாமுனிவருக்கு சாப விமோசனம் அளித்த பின் நேற்றிரவு முதல் காலை வரை ராமராயர் மண்டபத்தில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது.
7-ஆம் நாள் நிகழ்வாக அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்துடன் கிளம்பிய கள்ளழகர் மதிச்சியம், ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், தல்லாகுளம் பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளியவர், இரவு தல்லாகுளத்திலுள்ள உள்ள ராமநாதபுரம் சேதுபதி மன்னர் மண்டபத்தில் எழுந்தருளினார்

பின்னர், சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், நவதானியம், வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளை கொண்டு கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருமஞ்சனத்தை தொடர்ந்து மல்லிகைப்பூ, சம்பங்கி, கனகாம்பரம், ரோஜா, துளசி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களால் அலங்கரித்த பூப்பல்லாக்கில் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயில் முன் கள்ளழகர் எழுந்தருளினார்.
அக்கோயில் சார்பில் வழங்கப்பட்ட மாலையை அணிந்து கொண்ட கள்ளழகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது, பின்னர் பூப்பல்லாக்கில் கள்ளர் கோலத்தில் அழகர்மலையினை நோக்கி புறப்பட்டார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூப்பல்லாக்கில் எழுந்தருளிய கள்ளழகரை தரிசனம் செய்தனர், இன்று காலை கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்கோவிலுக்கு வந்தடைந்தார்.