`பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தலையிட்டது; நம் விமானிகள்.!’ – ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் இந்திய விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, “எங்களது சண்டை தீவிரவாதிகளுடனும் அவர்களது ஆதரவு உள்கட்டமைப்புகளுடனும்தான் என்பதில் கவனமாக இருந்தோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தலையிட்டது பரிதாபமான ஒன்று… அதனாலேயே நாங்களும் பதிலளிக்க நேர்ந்தது.” என்றார்.

வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஆயுதங்கள்
வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ஆயுதங்கள்

தொடர்ந்து, “எங்களது ராணுவ அமைப்புகளின் வலிமை பல சோதனைகளைக் கடந்து போரில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ஆகாஷ் அமைப்பு அற்புதமான செயல்திறனைக் கொண்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசாங்கத்தின் பட்ஜெட் மற்றும் கொள்கைகளின் ஆதரவு காரணமாக மட்டுமே சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு சூழலை உருவாக்க முடிந்தது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “எண்ணற்ற ஆளில்லா போர் விமானங்களும், ட்ரோன்களும் பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தாக்குதல் எதிர்ப்பு UAS அமைப்புகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற இந்திய வான் பாதுகாப்புப் பணியாளர்கள் அவற்றை முறியடித்தனர்” என்றார்.

மேலும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களையும் சில வீடியோக்களைப் பகிர்ந்தார்.

இந்தியாவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் பி.எல் 15 உள்ளிட்ட முக்கிய போர் விமானங்கள், ட்ரோன்களின் சிதறிய பாகங்களை காட்டினார்.

மேலும், இந்திய ராணுவ தளங்கள் மற்றும் அமைப்புகள் முழுமையான செயல்பாட்டில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் எந்த ஒரு ஆபரேஷனையும் நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர், “நாம் இன்னொரு போரில் ஈடுபட்டால் அது இப்போது நடந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இது ஒரு பூனை-எலி விளையாட்டு, எதிரியை வெல்ல நாம் முன்னேற வேண்டும்” என்றும் கூறினார்.

மேலும் ஆபரேஷன் சிந்தூரில், பணியாற்றிய அனைத்து விமானிகளும் வெற்றிகரமாக நாடு திரும்பினர் என்றும் தெரிவித்தார்.