சாதிவாரி கணக்கெடுப்பு: “2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது” – மநீம தலைவர் கமல்ஹாசன்

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குக் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “மிகவும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பைத் தவிர்க்கவும், தள்ளிப்போடவும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பிறகு, வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது.” என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு

இந்த முடிவை வரவேற்றிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், “நீங்கள் மக்களைக் கணக்கெடுக்கும்போதுதான் அவர்களைப் பார்க்கிறீர்கள். சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அர்பணிப்புடன், அனைவருக்காகவும் உழைத்த முந்திய தலைமுறைத் தலைவர்களை கௌரவித்தால்தான், இந்த சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரலாற்று ஆவணமாக மாறும்.

நீண்ட காலமாக சாதி அநீதிக்கு எதிராகவும், சம நிலைச் சமூகத்தை உருவாக்கவும், அதற்குரிய தரவுகளை ஒருங்கிணைக்கவும் மக்கள் நீதி மய்யம் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. எனவே, மத்திய அரசு நேற்று அறிவித்த சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

கமல்

அதேப்போல, தரவுகள் மக்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட வேண்டும். அது கோப்புகளில் தூங்கக்கூடாது. அதனால், 2011-ம் ஆண்டு நடந்ததைப் போல மீண்டும் நடக்காமல் மக்கள் முன் தரவுகள் சமர்பிக்கப்பட வேண்டும்” என பதிவிட்டிருக்கிறார்.