“பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!” – திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன.

இந்த நிலையில், கூட்டணி குறித்து இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியுள்ளார்.

கூட்டணி குறித்து அவதூறு

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் நாம் முன்வைக்கும் கருத்துகளினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து அவதூறு கருத்துகளை உதிரிகளைக் கொண்டு பரப்புகிறார்கள்.

தெளிவு... துணிச்சல்ல்... தொலைநோக்கு பார்வை - திருமா
தெளிவு… துணிச்சல்ல்… தொலைநோக்கு பார்வை – திருமா

அது ராஜதந்திரம் அல்ல

தேர்தல் அரசியலில் நாம் எந்த முடிவையும் எடுக்க முடியும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளை திறந்து வைப்பது, கூடுதல் பேரம் கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைத்துகொள்வது ராஜதந்திரம் அல்ல. அது ஒரு சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு தெளிவு வேண்டும்… ஒரு துணிச்சல் வேண்டும்… தொலைநோக்குப் பார்வை வேண்டும்.

விசிக ஒரு துருப்புச் சீட்டு

இன்னும் ஒரு சில மாதங்களில் கூட்டணி குறித்த பேச்சுகள் எழும். பாஜகவின் முதல் நிலைப்பாடு திமுக கூட்டணியை அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான். அதில் தான் குறியாக இருக்க வேண்டும். அதில் அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு விசிக.

விசிகவினரை தூண்டிவிட்டு ஒரு சொல்லை வாங்கி குழப்பத்தை உருவாக்க முயல்கிறார்கள். ஆளும்கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு. கூட்டணி தொடர்பான்ன உத்தி என்பது வேறு.

அதனால், இயக்கத் தோழர்கள் கவனமாக இருக்க வேண்டும்”.