NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ – சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தான் இதுபோன்ற நடவடிக்கைக்கு காரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

நா.த.க-வுக்குள் என்னதான் நடக்கிறதென விரிவாக விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய தலைமை நிலைய நிர்வாகி ஒருவர் “துரைமுருகன் அவரது சேனலில் அரசியல் நடப்பு குறித்து தினசரி பேசிவருகிறார், அந்த வகையில் கடந்த வாரம் அவர் வெளியிட்ட பல்வேறு கருத்துகள் கட்சிக்கும் தலைமைக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. தலைமையின் உரிய அனுமதியின்றி மணல் புள்ளி குறித்து கடுமையான விமர்சித்துப் பேசியதும்,

சாட்டை துரைமுருகன்

போக்சோ வழக்கில் சிக்கிய மத போதகர் தொடர்பான பேச்சும், நயினார் நாகேந்திரனை வாழ்த்தியதும்தான் பிரச்னை என்கிறார்கள். இதனால் பல தரப்பிலிருந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதோடு சேனலை வைத்து பொருளாதார ரீதியாக துரைமுருகன் வலிமையடைகிறார் என்ற தகவலும் பரவின. இதனை ரசிக்காத தலைமை, சேனலுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என அறிவித்தது” என்றனர்.

கட்சியின் மா.செ-க்கள் சிலர் பேசுகையில் “ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வெளியிடும் கருத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்பது மிகுந்த வேடிக்கைதான். கட்சியின் முதன்முதற் கொள்கையே மண்வளம் காப்பதுதான், அந்த வகையில் மணல் புள்ளிகளின் விவகாரங்களை அம்பலப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? அதேபோல் ஒரு மதபோதகர் போக்சோ வழக்கில் சிக்கும்போது அவரது முகத்திரையை தோலுரிப்பதிலும் தப்பில்லை.

நயினார் நாகேந்திரனை துரைமுருகன் பாராட்டியது கட்சியினர் விரும்பவில்லை என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், சங்கியை நண்பன் எனவும், மோடி தமிழை புகழுகிறார் எனவும், அண்ணாமலை பா.ஜ.க-வை வளர்த்துவிட்டார் என்ற தொனியில் அண்ணன் சீமானே பேசியிருக்கிறாரே.. அண்ணன் சீமானை பின்பற்றித்தானே துரைமுருகன் பேசியிருக்கிறார்” என்றனர் லாஜிக்காக.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

சாட்டை துரைமுருகன் விவகாரத்தின் பின்னணியே முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நிலவும் பனிப்போர்தான் எனப் பேச ஆரம்பித்த உள் விவகாரமறிந்தவர்கள், “செல்வாக்கு ரீதியாக துரைமுருகனின் வளர்ச்சி சமீப காலமாக உச்சத்தை தொட்டிருப்பதால் அவரை கார்னர் செய்ய ஒரு டீம் செயல்படுகிறது.

சீமானுக்கு நிழலாக இருந்து கட்சி நிர்வாகத்தை கவனித்துவரும் அந்த முக்கிய புள்ளியின் டீம் சமீப நாட்களாக துரைமுருகனுக்கு எதிரான விஷயங்களை சீமானின் காதில் போட்டுக் கொண்டே வந்திருக்கிறதாம். இந்த வேளையில் சர்ச்சை கமெண்ட்டுகளை துரைமுருகன் உதிர்க்கவே பக்காவாக ஸ்கெட்ச் போட்டிருக்கிறது அந்த டீம். இதனால் சூடான சீமான் தடாலடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். விளைவாகவே சேனலுக்கும் சாட்டைக்கும் சம்பந்தமில்லை என்ற அறிவிப்பு வந்திருக்கிறது” என்றனர்

சீமான்
சீமான்

`நாம் தமிழர் கட்சிக்குள்ளும் பனிப்போரா?`

என்ற கேள்வியுடன், நா.த.க முக்கிய நிர்வாகி தமிழம் செந்தில்நாதனை தொடர்புகொண்டோம் “சாட்டைக்கும் கட்சிக்கு எந்த தொடர்புமும் இல்லை என தலைமை அறிவிப்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. 2020 தொடங்கி ஏற்கனவே இரண்டு மூன்று முறை அறிவித்திருக்கிறார்கள். துரைமுருகன் முதலீடுகளை பெற்று நிறுவனமயப்படுத்தப்பட்ட ஊடகத்தை நடத்துவதால் கட்சிக்கு அப்பாற்பட்ட கருத்துகளை பேசுகிறார்.

உதாரணமாக வைகுண்ட ராஜன், மதப் போதகர் ஜான் ஜெபராஜ், பா.ஜ.க நயினார் நாகேந்திரன் குறித்து பேசும்போது அதெல்லாம் கட்சியின் கருத்தாக நினைத்துக் கொண்டு கட்சியின் தலைமை நோக்கி சில கேள்விகள் வருவதால் `சேனலுக்கும் கட்சிக்கும்’ சம்பந்தமில்லை என அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதேசமயம், துரைமுருகன் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராகவும் கட்சியின் முகமாகவும் தொடர்கிறார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. எங்கள் கட்சிக்குள் உள்முரண்கள் இருப்பதாக சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் வடிகட்டிய பொய். துரைமுருகனுக்கும் இந்த நடவடிக்கையில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என மறுப்பு தெரிவித்தார்.