வக்பு : `புதிய நடவடிக்கைகள் கூடாது..!’ – இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உச்ச நீதிமன்றம் அதிரடி

வக்பு திருத்த சட்டத்தை நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் வெற்றிகரமாக நிறைவேற்றியது மத்திய அரசு.

இந்த சட்டத்திற்கு எதிராக 90க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, நடிகர் விஜயின் தவெக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு பொதுநல அமைப்புகளும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இரண்டாவது நாள் விசாரணையாக இன்று நடைபெற்றது.

`நீங்கள் தடை செய்யப் போகிறீர்கள் என்றால்..!’

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த வக்பு சட்டத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் தடை செய்யப் போகிறீர்கள் என்றால், அது மிகவும் அரிதானதாகவே கருதப்படும். ஆனால் அதற்கு முன்பாக இந்த சட்டத்தின் நோக்கம் கடந்த கால வரலாறு உள்ளிட்டவற்றை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் கிராமம், கிராமமாக வக்பு சொத்துக்கள் என மாற்றப்பட்டு வருகின்றது. மேலும் இது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றிக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இதில் எவரும் பாதகப்படக்கூடாது என்றே இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் விரிவான எழுத்துப்பூர்வ பதிலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்கிறோம். அதுவரை இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது” என கோரிக்கை முன்வைத்தார்.

இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

Waqf | வக்ஃப் திருத்த சட்டம்|
Waqf | வக்ஃப் திருத்த சட்டம்|

உன்னிப்பாக கவனிக்கிறோம்!

குறிப்பாக வக்பு கவுன்சில்களில் மாற்று மதத்தினர் உறுப்பினர்களாக இடம்பெறுவது மற்றும் 1995 சட்டத்தின் படி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீண்டும் வகைப்படுத்துவது போன்றவற்றை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம்” என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அப்போது பேசிய மத்திய அரசின் வழக்கறிஞர், “எனில் ஒரு வார காலத்திற்கு இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். இந்த ஒரு வார காலத்திற்கு இந்த சட்டத்தின் படி நீதிபதிகள் குறிப்பிட்ட விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்” என உறுதி அளித்தார்.

உத்தரவு… ஒத்திவைப்பு..!

இந்த உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வக்பு சட்டத்தின் படி வக்பு கவுன்சிலில் எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே வக்பு என பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்

மேலும் வக்பு சட்ட திருத்தம் விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அதன் மீது அடுத்த ஐந்து நாட்களுக்குள் எதிர்மனுதாரர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதையும் பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் நூற்றுக்கணக்கான மனுக்கள் தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் அவை அனைத்தையும் விசாரிக்க முடியாது என்றும் ஏதாவது ஐந்து வழக்கை மட்டுமே விசாரணைக்கு உகந்ததாக எடுத்துக்கொண்டு மற்ற வழக்குகள் அனைத்தையும் இடைக்கால நிவாரணம் கோரிய மனுக்களாக கணக்கில் எடுத்துக்கொண்டு முடித்து வைப்போம் எனவும், எந்த ஐந்து மனுக்களை விசாரிக்க வேண்டும் என்பதை மனுதாரர்களை கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே ஐந்தாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.