தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபான பாட்டில்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் இவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நவ்லாக் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (வயது 45) என்பவர், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில் தியாகராஜன் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், பண மோசடி, கொலை மிரட்டல் என தியாகராஜன் மீது புகார்களை அடுக்கியிருந்தார் ராஜலட்சுமி.
அது குறித்து நம்மிடம் பேசிய ராஜலட்சுமி, “என் புருஷன்கிட்டருந்து என்னைய பிரிச்சு, அவரோட வீட்டுக்கு என்னைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டார் தியாகராஜன். கடந்த நாலு வருஷமா, நானும் அவரும் புருஷன் பொண்டாட்டியாகத்தான் வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். என்னுடைய 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், ஒரு வீடு எல்லாமே அவர்கிட்டதான் இருக்கு. அவருக்காக, இதுவரைக்கும் 1.25 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்கேன்.

இவ்வளவு தூரம் நம்பிக்கையோட அவரோட நான் வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்குற நிலையில, ஜெயந்திங்கிற பெண்ணோட அவருக்குத் தொடர்பு இருக்கிறது சமீபத்துலதான் தெரியவந்துச்சு. அந்தப் பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, தனிக்குடித்தனமே நடத்துறார். நான் கோபத்துல, `எனக்கு துரோகம் பண்ணிட்டியே’னு தியாகராஜன்கிட்ட சண்டைபோட்டேன். அதுக்கு, என்னை அடி அடின்னு அடிச்சவர், `நான் அவகூடதான் வாழ்வேன்… எனக்கு எதைப் பத்தியும் கவலையில்லை… உன்னைய கொளுத்திடுவேன்’னு மிரட்டினார். இதுக்கு நடுவுல மேலும் ரெண்டு பொண்ணுங்களையும் தியாகராஜன் ஏமாத்தியிருக்காரு.
நான் தீவிரமா விசாரிச்சப்பதான், பொண்ணுங்களை ஏமாத்திப் பணம் பறிக்கிறதை ஒரு வேலையாகவே தியாகராஜன் வெச்சிருக்குறது தெரியவந்துச்சு. அவர்கிட்ட இருக்கிற என்னோட பணம், நகை, வீடு எல்லாத்தையும் காவல்துறை மீட்டுத் தரணும். மிரட்டல், மோசடி, அபகரிப்பு, அச்சுறுத்தல்னு எல்லை மீறி ஆட்டம் போடுற தியாகராஜன் மேல கடும் சட்ட நடவடிக்கையும் எடுக்கணும்’’ என்று கூறியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்.எல்.எஸ்.தியாகராஜனிடமே விளக்கம் கேட்டிருந்தோம். “ராஜலட்சுமி என்மேல் சுமத்தியிருக்கும் எல்லாக் குற்றச்சாட்டுகளுமே 100 சகிவிகிதம் பொய். தேவையில்லாமல் என்னைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துக்காகவே இதையெல்லாம் செய்கிறார்’’ என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க-விலும் பெரும் சலசலப்பைக் கிளப்பிய இந்த விவகாரம் குறித்து, 13-4-2025 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், இரண்டு பக்க கட்டுரை வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தியாகராஜனிடம் இருந்து கட்சிப் பதவியை பறித்து `முரசொலி’யில் கட்டம் கட்டி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது, தி.மு.க தலைமை. அதில், “ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து தியாகராஜனை விடுவித்து, அவருக்குப் பதிலாக விஜயகுமார் என்பவர் அப்பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.