மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டு தோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடந்து வந்தது.

இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குன்றத் தொடங்கியது. இதன் விளைவாக கடல் வாழ் உயிரினங்களின் உருவாக்கம் குறைந்து போனது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்வளம் அறவே அழிந்து போகும் நிலை உருவாகும் என ஆராய்சியாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டது.
இதனை தடுக்க மீன் உற்பத்தி காலங்களில் கரையில் இருந்து 3 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்கச் செல்லுவதற்கு தடை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு கடந்த 2001ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 45 நாள்கள் மீன்பிடிக்க தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தது.
இதன்படி பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான 1076 மைல் தூர கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலான 45 நாள்கள் மீன்பிடி தடைகாலம் நடைமுறை படுத்தப்பட்டது. இந்த தடைநாள்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக 45 நாளில் இருந்து 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்த காலங்களில் கரையிலிருந்து 3 கடல்மைல் தூரத்திற்கு அப்பால் மீன்பிடிப்பில் ஈடுபடும் இழுவை படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல கூடாது.
இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்ட பகுதிகளில் உள்ள சுமார் 6700 விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளில் மட்டும் 1850 விசைப்படகுகள் மீன்பிடி தடை துவங்கியதால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தடை காலங்களில் மீனவர்களுக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் தற்போது ரூ.8 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15-ல் துவங்கி ஜூன் 14 நள்ளிரவு வரை நடைமுறை படுத்தப்பட உள்ளது. ஆண்டு தோறும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடை காலம் 61 நாள் மட்டும்தான். ஆனால், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள், இயற்கை இடர்பாடுகள், போதிய மீன் பாடு இல்லாதல், வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதே 70 முதல் 90 நாள்களாக சுருங்கி விட்டது.
இதனால் மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாடும் நிலையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மீனவர்கள் தங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
