தவெக சார்பில் இராயப்பேட்டை YMCA மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாளை மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நாள் நோன்பு இருக்கும் முடிவில் விஜய் இருக்கிறாராம்.

இப்தார் விருந்து
தவெக சார்பில் YMCA மைதானத்தில் இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்தப் போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முதல் அந்த நிகழ்ச்சிக்காக பரபரவென ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருக்கின்றனர் தவெகவினர். அதன்படி உள்ளரங்கம் ஒன்றில் 2000 பேர் அமரும் வகையில் ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியை சேர்ந்த மசூதிகளின் நிர்வாகிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் குறிப்பிட்ட அளவில் இஸ்லாமியர்கள் அழைத்து வரப்படவிருக்கின்றனர். அதேமாதிரி, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 இஸ்லாமியர்களை அழைத்து வருமாறு மா.செக்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான பாஸ் விநியோகம் செய்யப்படவிருக்கிறது.
மாலை 6:20 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு இந்த நிகழ்ச்சி நடக்கக்கூடும் என்கின்றனர். விஜய்யும் நாளை ஒரு நாள் முழுமையாக நோன்பு இருந்து இஸ்லாமியர்களின் வழிமுறைப்படி தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்துக்கொள்ளப் போகிறாராம்.

நாளை நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் ஆனந்தும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் அவர்களுடன் விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் இன்று நேரில் மேற்பார்வையிட்டனர். யார் யார் எங்கே அமர வேண்டும், விஜய் எங்கே இருக்க வேண்டும் என்கிற மொத்த ப்ளூ பிரிண்டையும் தயார் செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
