Bofors Case: ராஜீவ் காந்தி சம்பந்தப்பட்ட `போஃபர்ஸ்’ ஊழல் வழக்கு… மீண்டும் விசாரணை..?!

1980-களில் புதைந்துப்போன வழக்கை தற்போது மீண்டும் தூசி தட்டி உள்ளது சிபிஐ.

1980 காலக்கட்டங்களில் இந்திய பிரதமராக இராஜீவ் காந்தி இருந்தப்போது நடந்த மிகப்பெரிய ஊழல் ‘போஃபர்ஸ்’ (Bofors). 1986-ம் ஆண்டு இந்தியாவுக்கும், ஸ்வீடனுக்கும் இடையே ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஸ்வீடன் வரலாற்றிலேயே, அந்த நாட்டுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய ராணுவ ஆயுத ஒப்பந்தம் இது தான். இந்த ஒப்பந்தத்தின் மொத்த தொகை ரூ.1,437 கோடி ஆகும்.

காங்கிரஸ் அடைந்த அதிர்ச்சி தோல்வி…

1987-ம் ஆண்டு, இந்த ஒப்பந்தத்தை பெற ஸ்வீடனின் பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக போஃபர்ஸ் என்ற வங்கியிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆயுத ஒப்பந்தத்திற்காக போஃபர்ஸ் வங்கி இந்தியாவின் அப்போதைய பல அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு 64 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியுள்ளது என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அரசியல்வாதிகளில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஒருவர் என்பதுதான் இந்த சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.

இந்த ஊழலின் விளைவாக, அடுத்து வந்த 1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

2004-ம் ஆண்டு, இந்த சம்பவத்திற்கும், ராஜீவ் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே இந்த ஒட்டுமொத்த வழக்கையும் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில், தற்போது மத்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து போஃபர்ஸ் ஊழல் சம்பந்தமான தகவல்களை கோரியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் உளவு துறை ஏஜென்சி Firmfax-ன் இந்த ஊழல் சம்பந்தமான தகவல்கள் தற்போது அமெரிக்காவிடம் உள்ளது. இந்தத் தகவல்களை கேட்டு அமெரிக்க நீதி துறைக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளது சி.பி.ஐ.

டெல்லி உயர் நீதிமன்றம்

அமெரிக்காவைச் சேந்த தனியார் உளவுத்துறையின் ஏஜென்சி ஃபிரிம்ஃபேக்ஸ்-ன் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மேன். கடந்த 2017-ம் ஆண்டு, இவர் போஃபர்ஸ் ஊழல் பற்றி பேசும்போது, இந்த ஊழலில் பணமாக 64 கோடி ரூபாய் சுவிஸ் வங்கி கணக்கு ‘மான்ட் பிளான்க்’கில் வைத்திருப்பதை தெரிந்துக்கொண்ட ராஜீவ் காந்தி மிகவும் கோபப்பட்டார். அதுக்குறித்து அவர் விசாரிக்க முனைந்தப்போது அப்போதைய அரசு அவரின் முயற்சிகளை தடுத்துவிட்டது என்று கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு, ஃபிரிம்ஃபேக்ஸ் நிறுவனம் இந்த ஊழல் சம்பந்தமான தகவல்களை அமெரிக்க அரசிடம் இருந்து பெற டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. அதன் விளைவாக, தற்போது சி.பி.ஐ அமெரிக்க நீதித்துறையை நாடியுள்ளது.