“காடு இருந்தா எடுத்துக்குவானுங்க. ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க. படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” – இது இந்தக் கால அசுரன் திரைப்படம். ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ – இது அந்தக் கால நறுந்தொகை பாடல். ஆக, எந்தக் காலமாக இருந்தாலும் கல்வி என்பது மிக மிக முக்கியம். கல்வியின் அவசியத்தைத் தன் செயலின் மூலம் உலகம் முழுக்க பறைசாற்றி இருக்கிறார் தென் கொரியா இளைஞர் ஒருவர்.
தசைநார் சிதைவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தென்கொரிய இளைஞர் ஜாங் இக்-சன். பேச்சு மற்றும் கண் அசைவு தவிர்த்து உடலின் மற்ற அனைத்து பாகங்களும் முடங்கிய நிலையில் முதுகலைப் பட்டம் வரை பெற்று, மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறி உள்ளார் ஜாங் இக்-சன்.

சமீபத்தில் தென்கொரியா நாட்டில் உள்ள குவாங்ஜு பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா ஒன்று நடந்தது. அந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத் தலைவர் கிம் டோங்-ஜின், ஜாங் இக்-சன்னுக்கு முதுகலை பட்டம் வழங்கி பாராட்டினார். தற்போது 37 வயதாகும் ஜாங் இக்-சன் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக அவருடைய ஆய்வு அறிக்கையை அவரே அவருடைய கண் அசைவுகள் மூலம் டைப் செய்யும் கருவியை (Eye Tracking Mouse) பயன்படுத்தி டைப் செய்து சமர்ப்பித்துள்ளார்.
ஐந்து வயதிலிருந்து ஜாங் இக்-சன் இந்த தசைநார் சிதைவு மரபணு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டதால் அவரது உடல் அசைவு மற்றும் நகரும் திறன் முழுமையாகச் செயல் இழந்து குணப்படுத்த முடியாத நோயாக மாறி உள்ளது. இருந்தபோதிலும் மனம் தளராமல் தனது கல்வியைத் தொடரவே விருப்பம் கொண்டு இப்பொழுது முதுகலை பட்டப்படிப்பு வரை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதனால் குவாங்ஜு பல்கலைக்கழகம் இவருக்குக் கல்வி விருதையும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

இந்த விழாவில் பேசிய அவர், “எவ்வளவு சிரமங்களை அடைந்தாலும் படிக்க வேண்டும் என்ற மன உறுதியை நான் கொண்டு இருந்தேன். தென் கொரியாவின் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு 2019 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 2021 இல் சமூக நலன் துறையில் இளங்கலை பட்டம் பெற்றேன். என்னால் கையால் எழுதும் திறன் இல்லாத காரணத்தால் குறிப்புகள் எடுக்க முடியாமல் சிரமமாக இருந்தது. முடிந்தவரைக் கிடைத்த மின் புத்தகங்களைப் பயன்படுத்திப் படிக்க முயற்சி செய்தேன்.
சில புத்தகங்கள் மின் புத்தகங்களாகக் கிடைக்காவிட்டாலும் ஸ்கேனர் கருவிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் அந்த புத்தகங்களை மாற்றிப் படிக்க ஆரம்பித்தேன். தகவல்களை மனப்பாடம் செய்வதிலும் மிகுந்த சிரமம் எனக்கு இருந்தது. இருந்தாலும் என்னுடைய படிப்பை நான் தொடர்ந்து கொண்டே இருந்தேன். முதுகலை படிப்பு படிக்கும்போது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க என்னுடைய கண் அசைவுகளை மூலம் டைப் செய்யும் கருவிகளை (Eye Tracking Mouse) பயன்படுத்தி ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்து முடித்தேன். எங்களைப் போன்ற தசைநார் சிதைவு நோயாளிகள் வாழ்வினை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே என் லட்சியம்” என்று பேசியுள்ளார் ஜாங் இக்-சன்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel