“உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது” – நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், “உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது” எனப் பதிவிட்டிருப்பது வைரலாகிவருகிறது.

புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி வழங்கப்படாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அறிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் முதல் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் வரை கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், புதியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை அரங்கேற்ற பா.ஜ.க துடிக்கிறது எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வார்த்தைப் போர் தொடங்கியது.

அதன் விளைவாக சமூக வலைதளங்களில் #Getoutmodi டிரெண்டானது. அதற்கு எதிராக #Getoutstalin ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இதற்கு நடுவே, நடிகர் பிரகாஷ் ராஜ் தன் எக்ஸ் பக்கத்தில், “உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.