Adani: `அது தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது’ – அதானி குறித்த கேள்விக்கு அமெரிக்காவில் மோடி சொன்னதென்ன?

தனிப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றியுள்ளது பற்றியும், அதன் அதிகபட்ச கடன் சுமைகள் பற்றியும் 2023ம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஹிண்டன்பர்க்கின் இந்த ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை உடைந்து ஏராளமான முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்திருந்த பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இரண்டே நாள்களில் 20 முதல் 30 சதவிகிதம் வரை சரிந்தது. இது இந்திய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக வெடித்தது.

அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்தது என்பதே ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மற்றொரு புகாராக இருந்தது.

மோடி, ட்ரம்ப்

இந்த விவகாரத்தில் அதானி, அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியதாக அமெரிக்க அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதானி மீது ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டைச் சுமத்தி இருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்க அதிகாரிகள், அதானியை விசாரிக்க வேண்டுமென்றால் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம். இதற்காக அமெரிக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பில் அதானி விவகாரம் குறித்து பேசப்படுமோ, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தொடருமோ என்று அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

அதானி, மோடி

அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அதானி விவகாரம் குறித்து மோடியிடன் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மோடி, “நான் முதலில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு.. ‘வசுதைவ குடும்பம்’, அதாவது உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்பதே எங்கள் கலாசாரம். இந்தியர்கள் அனைவரும் எங்களின் சொந்த குடும்பத்தினர்.

அதானி விவகாரம் என்பது தனிப்பட்ட மேட்டர்.. அது ஒரு தனிப்பட்ட நிறுவனம் தொடர்பானது. இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தும் போது இதுபோல தனி நபர்கள் குறித்த விஷயத்தில் எதையும் விவாதிக்க மாட்டார்கள்” என்று அதானி குறித்தப் பேச்சைத் தவிர்த்துவிட்டார்.

அதிபர் ட்ரம்ப்பும் அதானி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை.

இதுகுறித்து ராகுல் காந்தி, “நாட்டில் கேள்வி கேட்டால் கள்ள மெளனம் சாதிக்கிறார். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது எங்களின் தனிப்பட்ட விஷயம்! அமெரிக்காவில் கூட, மோடி ஜி அதானியின் ஊழலை மறைத்தார்.” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மோடியின் பேச்சை விமர்சித்திருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play