Modi US Visit: `இந்தியாவுக்கு F-35 போர் விமானம் விற்பனை; ராணுவ வர்த்தகம் அதிகரிப்பு!’ – ட்ரம்ப்

பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள கிராண்ட் பாலசில் நடந்த செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டையும், தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி – டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி சந்திக்கும் முதல் சந்திப்பு இது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய ட்ரம்ப், “பிரதமர் மோடியுடனும், இந்தியாவுடனும் ஒரு சிறப்பு பிணைப்பை காண்கிறேன். இந்தியப் பிரதமர் மோடி மிகவும் கடுமையான பேச்சுவார்த்தையாளர். வளர்ந்து வரும் சீனாவை எதிர்கொள்ளும்போது ஒத்த எண்ணம் கொண்ட முக்கிய பங்காளியாக இந்தியாவைக் காண்கிறேன்.

இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கான இராணுவ விற்பனையை பல பில்லியன் டாலர்களாக அதிகரிப்போம். F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான வழியையும் வகுத்து வருகிறோம். இரு நாடுகளும் இனி வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்து செயல்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் கவனம் செலுத்துவோம். பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் வரும்” எனக் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்புக்கு முன்பே, இந்தியா இறக்குமதிப் பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தியப் பொருள்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார். எனவே, பிரதமர் மோடி அரசு, அமெரிக்கா செல்வதற்கு முன்பே, உயர் ரக மோட்டார் சைக்கிள்களுக்கான வரிகளைக் குறைத்திருந்தது. இது இந்தியாவில் அமெரிக்க உற்பத்தி நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் போன்ற நிறுவனங்களுக்கு ஓர் ஊக்கமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.