Rain Alert: தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி – சென்னையில் துணை முதலமைச்சர் ஆய்வு! | Live

சென்னையில் துணை முதலமைச்சர் ஆய்வு!

சென்னையில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மேயர் பிரியாவுடன் துணை முதலமைச்சர் சென்னை மாநாகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்து வருகிறார்.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் விளைவாக, தற்போது, வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது என்றும், இது தீவிரமடைந்து அடுத்து இரண்டு நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையொட்டி, நேற்று இரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோர பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இன்று அதிகாலையில்‌ இருந்து சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஓ.எம்.ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது‌.

வானிலை மையம் கணிப்பு

இதை முன்னிட்டு இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வானிலை மையத்தின் கணிப்பு படி, இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு, சென்னையில் மயிலாப்பூர், மாதவரம், தண்டையார்பேட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் லேசான மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.