மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை வந்திருந்தார். பல மருத்துவமனைகளில் அவர் திடீரென்று ஆய்வு நடத்தினார். கோவை அரசு மருத்துவமனையில் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியின் சேவையை சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன், “கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 72 நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த மையங்களில் காலை 8-12 மணி வரையும், மாலை 4-8 மணி வரையும் மருத்துவ சேவை வழங்கப்படும். தடை செய்யப்பட்ட மாத்திரைகள் விற்பனை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் மருத்துவமனையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது புகார் இருந்தால் அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை அரசு மருத்துவமனைக்கு தினசரி சுமார் 4,500-க்கும் மேற்பட்டோர் வருகை புரிகின்றனர்.
வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.” என்றவரிடம், செய்தியாளர்கள் யூடியூபர் இர்ஃபான் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், “இர்ஃபானுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் கொலை குற்றமில்லை. இது பெரிய விசயமல்ல.” என்றார்.