Chennai : `2-ம் கட்ட மெட்ரோ திட்ட செலவில் 65% மத்திய அரசு ஏற்கும்’ – நிதியமைச்சகம் அறிவிப்பு

கடந்த வியாழக்கிழமை, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையொட்டி, அதற்கான 65 சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணி திட்டத்தின் மொத்த செலவு ரூ.63,246 கோடி. இந்த திட்டம் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இது முழுக்க முழுக்க மாநில அரசின் திட்டமாக இருந்ததால், மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை. அதாவது ஒரு திட்டம் மாநில அரசு திட்டமாக இருந்தால் அந்த திட்டத்தின் மொத்த செலவில் வெறும் 10 சதவிகிதத்தை மட்டுமே மத்திய அரசு வழங்கும். மீதி தொகையை மாநில அரசு தான் ஏற்க வேண்டும்.

போதுமான நிதியில்லாமல்…

போதுமான நிதி இல்லாமல், இந்த திட்டம் மெதுவாகவே செயல்பட்டு வந்தது. இதனையடுத்து, இந்த திட்டத்திற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த மனுவில் இந்த கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் தான், கடந்த வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு எவ்வளவு நிதியை ஒதுக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. அப்போது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ தகவல் சரிபார்ப்பகம் அளித்த தகவலில், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.7,425 கோடி வழங்கும் என்றும், தமிழ்நாடு அரசு ரூ.22,228 கோடி வழங்கும் என்றும், இருதரப்பு மற்றும் பன்முக பிரதானக் கடனாக ரூ.33,593 கோடி வாங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தை மத்திய அரசு திட்டமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுவரை இந்த திட்டம் மாநில அரசின் திட்டமாக செயல்பட்டு வந்தது. அதனால் அப்போது இந்த திட்ட செலவின் 90 சதவிகிதத்தை மாநில அரசே ஏற்க வேண்டியதாக இருந்தது. மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது. இருந்தாலும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு கடனாக பெற்ற ரூ.32,548 கோடிக்கு மத்திய அரசு உதவி செய்தது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் படி, இனி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான கிட்டதட்ட 65 சதவிகித தொகையை மத்திய அரசு வழங்கும். இதில் முழுக் கடன் ரூ.33,503 கோடியும், சார்நிலைக் கடன் ரூ.7,425-ம் அடங்கும். மீதி 35 சதவிகிதத்தை மாநில அரசே ஏற்கும்.

பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பு, இந்த திட்டத்திற்கு கடன் பெறுவது அல்லது அதற்கான ஏற்பாடுகள் செய்வது மாநில அரசுக்கானதாகும். ஆனால் தற்போது அளித்துள்ள ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன் திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank), புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank) ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும்.

மத்திய அரசு

அதன்படி, இந்தக் கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாகக் கருதப்படும், சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து கடன் தொகை மாநில அரசுக்கும் மாநில அரசின் பட்ஜெட்டிலிருந்து சிஎம்ஆர்எல் (CMRL) நிறுவனத்திற்கும் செல்லும் தற்போதைய வழிமுறைக்கு மாறாக, சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து மத்திய அரசுக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து பாஸ் த்ரூ உதவி (pass-through assistance) என்ற முறையில் நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்திற்கு செல்லும் வழிமுறையாக மாற்றியமைக்கப்படும் மற்றும் சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருக்கும் இடத்தில் சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்பட நியமிக்கப்படும்.

கடன் திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்ளில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டு மாரடோரியம் (moratorium) காலத்திற்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்த பின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சி.எம்.ஆர்.எல். இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும்” என்று கூறப்பட்டுள்ளது.