மதுரை: பாரம்பர்ய முறையில் மாவு இடித்து செல்லாயி அம்மனுக்குப் படையல்; களைகட்டிய பாறைப்பட்டி திருவிழா

ஊரிலுள்ள அம்மனுக்கு படைக்க வீடுகளில் பாரம்பர்ய முறைப்படி உரலில் மாவு இடித்து சுவையான புட்டுமாவு தயாரித்து படையலிடும் எம்.பாறைப்பட்டியில் நடைபெறும் திருவிழாவைக் காண, பல ஊர் மக்களும் திரண்டு வருகின்றனர்.

செல்லாயி அம்மன் கோயில்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியிலுள்ள பாறையில் பழைமை வாய்ந்த செல்லாயி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் இங்கு விழா எடுத்து அம்மனுக்கு புட்டுமாவு இடித்து படையலிட்டு வழிபடுவதை, கிராம மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

திருவிழா

பெரும்பாலான ஊர்களில் கோயில் திருவிழாவில் அரிசி மாவு மூலம் மாவிளக்கு தயாரிப்பது வழக்கம். ஆனால், இந்த கிராமத்தில் மட்டும் முன்னோர்கள் வழிகாட்டியதுபோல கடலை மற்றும் கேப்பை மூலம் லட்டு போன்ற புட்டுமாவு உருண்டை தயாரித்து படைக்கின்றனர்.

நவீன கருவிகளை பயன்படுத்தாமல் ஒவ்வொரு வீட்டின் முன்பும் உள்ள உரலில் உலக்கை மூலம் ஆண்-பெண் பேதமின்றி இருவரும் இணைந்து மாவு இடித்து இந்த புட்டு மாவை தயாரிக்கின்றனர்.

திருவிழா

கடலை பருப்பை வறுத்து, வெள்ளத்துடன் உரலில் போட்டு இடித்து கொண்டிருக்கும்போதே, கேப்பையை இடித்து மாவாக்கி புட்டாக அவித்து அதையும் இந்தக் கடலை மற்றும் வெள்ளத்துடன் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கின்றனர்.

இது குறித்து பேசிய கிராமத்தினர், “இந்த மாவினை பத்து நாள்கள் முதல் ஒரு மாதம் வரை பாதுகாத்து வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். இன்று உள்ள நவீன உணவு வகைகளை விட ஆரோக்கியமானதாகவும், சத்தான உணவாகவும் திருப்பதி லட்டுக்கு இணையான சுவையுடன் இந்த புட்டுமாவு உருண்டைகள் இருக்கும்” என்றனர்.

செல்லாயி அம்மன் கோயில்

தற்போது அம்மன் கோயில் திருவிழா உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில் எம்.பாறைப்பட்டி கிராம மக்கள் பாரம்பர்ய முறைப்படி மாவு இடித்து தயாரிக்கும் இந்த புட்டுமாவு உருண்டைகளை வாங்கிச் செல்ல, பல ஊர்களைச் சேர்ந்த உறவினர்களும் பொதுமக்களும் தேடி வருகிறார்கள்.