திருச்சி: `8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை..!’ – தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28.9.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகாமில் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பத்தாயிரம் காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பதிவு செய்யவும், அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை நடத்தவும், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான விண்ணப்பத்தை பதிவு செய்யவும் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து இந்த முகாமினை ஏற்ப்பாடு செய்துள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். முகாமில் கலந்து கொள்ள கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை உள்ளது. மேலும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங்,பார்மசி, பொறியியல் போன்ற துறை மாணவர்களும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கூறுகிறது. முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களின் வல்லுனர்கள் கலந்துக்கொள்ள இருப்பதினால் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நபர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.