காதல் விவகாரம்: மாற்று சமூக இளைஞரை கும்பலுடன் சென்று தாக்கிய நா.த.க நிர்வாகி கைது – நடந்தது என்ன?!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததோடு, கடந்த 4 நாள்களுக்கு முன்பு மதுரையில் திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த பெண்ணின் உறவினரான, நாம் தமிழர் கட்சியில் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்து வரும் அருணகிரி என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மதுரை இலுப்பை குளத்திற்கு சென்று சந்தோஷை சாதி ரீதியாக திட்டி தாக்கி உயிர் நாடியில் உதைத்ததாக கூறப்படுகிறது.

அதோடு, சந்தோஷ் பர்சில் வைத்திருந்த 20,000 ரூபாய் மற்றும் அவரின் தங்க சங்கிலி ஆகியவற்றையும் அவர்கள் பறித்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, சந்தோஷோடு இருந்த அந்த இளம்பெண்ணை அங்கிருந்து அழைத்து வந்துள்ளனர்.

அருணகிரி

இந்நிலையில், அருணகிரி மற்றும் அவரின் சகாக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சந்தோஷ், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு, இது சம்பந்தமாக வளநாடு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து அருணகிரி, கார்த்திக், சாமிக்கண்ணு, பிரவீன்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள அருணகிரி கடந்த 2016 – ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை, நாம் தமிழர் கட்சி நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb