Vijay : `விஜய் தேர்தல் களத்தில் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாக இருப்பார்’ – ஹெச்.ராஜா

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க பொறுப்புக் குழு நிர்வாகி ஹெச்.ராஜா, “ராகுல் காந்தி அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான நபர்களைச் சந்தித்துப் பேசி உள்ளார். இந்தியாவில் உள்ள பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன் என பேசி உள்ளார்.

விஜய்

இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சீக்கிய சமுதாய மக்களை காங்கிரஸ் கட்சி படுகொலை செய்தது, ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து சாதி, மத கலவரங்களை உண்டாக்கி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். இந்தியாவுக்கே எதிரிபோல செயல்படுகிறார்.

இந்தியா குறித்து மிக தவறான கருத்துகளை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசி உள்ளார். ராகுல் காந்தி தேச விரோதமாக செயல்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் 16,000 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 4,000 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி தர வேண்டும், திட்டத்தின் விதிகளின்படி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும்.

முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து பிடிவாதம் செய்கிறது, அமைச்சர் மகேஸ் பொய்யாமொழியின் குடும்ப பிள்ளைகளுக்கு மும்மொழி வேண்டும், தமிழக மக்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இருமொழி கற்றுக் கொடுக்கிறார்கள்.

1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார், தமிழக மக்களை தி.மு.க ஏமாற்றி வருகிறது, தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மறுநாள் காலை மத்திய அரசின் கல்வி நிதி வந்தடையும்.

நீட் தேர்வு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமல்படுத்தப்பட்டது, நீட் விலக்கு வேண்டுமானால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்ய வேண்டும்.

பா.ஜ.க மது அருந்ததாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்க வேண்டாம் என திருமாவளவன் நினைத்து இருக்கலாம். மகாவிஷ்ணு எந்தவொரு தவறும் செய்யவில்லை, மகாவிஷ்னுவை மிரட்டும் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் ஏராளமான குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிமீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வருவதாகும். அதனால் விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பா.ஜ.க-விற்கு பாதிப்பில்லை, திராவிடக் கட்சிகளின் வாக்கைத்தான் விஜய் பிரிப்பார்” எனக் கூறினார்.