கோவை: தடுப்பை மீறி, பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த 3 பேர்… இரவோடு இரவாக பள்ளம் மூடல்!

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அந்த வகையில் திருச்சி சாலையில் உள்ள ஒண்டிபுதூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆறு அடியில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

கோவை பள்ளம்

முக்கியச் சாலை என்பதால், இது அந்த குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அந்த வழியே ஒரே பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனர். அப்போது பள்ளத்தின் அருகே வரும்போது அவர்கள் நிலை தடுமாறியுள்ளனர். ஒரு கட்டத்தில் தடுப்புகளையும் மீறி, மூன்று பேரும் பள்ளத்தில் விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

கோவை பள்ளத்தில் விழுந்த சிசிடிவி

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு கைகளிலும், மற்றொருவருக்கு இடுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஒரே பைக்கில் விதிகளை மீறி மூன்று இளைஞர்கள் சென்றதும் விபத்துக்கு ஒரு காரணம். அதேநேரத்தில் அங்கு வைக்கப்பட்ட தடுப்புகள் உறுதித் தன்மையுடன் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்கான குழிகள் தோண்டப்பட்டாலும், பணிகள் மிகவும் மந்தமாகவே நடக்கின்றன. என்ற புகார் உள்ளது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் இரவோடு இரவாக பள்ளத்தை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.