`உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாரா ஸ்டாலின்?’ – இபிஎஸ்-ஸைச் சாடும் ஆர்.எஸ்.பாரதி

“உடல்நிலை சரியில்லாததால் தான் முதலமைச்சர் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்க தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறுகிறார்கள்” என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

கடந்த வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க ஆட்சியில் பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதுகாப்பு இல்லை. பேச்சுவார்த்தை நடத்த சென்ற பெண் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் போலீஸாருக்கும் பாதுகாப்பு இல்லை.

எடப்பாடி பழனிசாமி

துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் என முதலமைச்சர் முன்பு சென்ற வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து, எத்தனை முதலீடுகள் கொண்டு வரப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை நாங்கள் கேட்டிருந்தோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. முதலீடுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்களை விஸ்தரிப்பு செய்ய தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார். அதை மறைக்கத்தான் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டி பொழுதை போக்கி வருகிறார்.

அமைச்சர்களுடன் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நெருக்கமாக இருந்ததால்தான், அவருக்கு அரசுப் பள்ளிகளில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்துவது அவசியம் தானா? அந்தப் பணத்தில் அம்மா உணவகத்தில் தரமான உணவை வழங்கலாம்” என்று பேசினார்.

RS Bharathi: ஆர்.எஸ்.பாரதி

இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்ததால்தான், அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சையாக பேசியவருக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்திருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சராக இருந்த நீங்கள் வி.ஐ.பி தானே? ஒரு வி.ஐ.பி-யை பார்க்க நிறைய பேர் வருவார்கள் என்பது அடிப்படை தியரி. பார்க்க வரும் அனைவரின் பின்புலத்தை விசாரித்த பின்னர்தான் அனுமதி அளிப்பார்களா? இதுகூட தெரியாத நீங்கள் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள்? இப்போது எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது நடந்த தாக்குதல் மூலம் போலீஸுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி புலம்பியிருக்கிறார். கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவுக்கு அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தள்ளியது யார்?

இந்த மாதிரி உங்கள் ஆட்சியில் போலீஸாரால் பெண்களுக்கு மட்டுமல்லாமல், போலீஸாருக்கும் பாதுகாப்பில்லாமல் போனது பற்றி ‘செலக்டிவ் அம்னீஷியா’ போல் மறந்துவிட்டதா? உடல்நிலை சரியில்லாததை மறைப்பதற்காக முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாக கூறுவதாக அவர் உளறியிருக்கிறார்.

ஸ்டாலின்

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள் முதலமைச்சர் குறித்து பேசாமல் இருப்பது நல்லது. ‘இட்லி சாப்பிட்டார்…வார்டுக்கு மாறிவிட்டார்…விரைவில் வீடு திரும்புவார்கள்’ என்று அவர்கள் கதைக்கட்டியது போல எங்களுக்கு கதைக் கட்ட தெரியாது. தி.மு.க வெளிப்படையான இயக்கம். ஆனால் திரை மறைவாக செயல்படுவதுதான் அ.தி.மு.க கொள்கை.

முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தால் தினமும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது பொறுக்கமுடியாமல் தான் வயிற்றெரிச்சலில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு இருக்கும் பொறாமை நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறையும் பாழ்படுத்திய அவருக்கு பேச எந்த தகுதியும் கிடையாது. ‘நானும் இருக்கிறேன்’ என்று காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.