`விஜய் கட்சியைத் தடுத்து நிறுத்துவது திமுக-வின் நோக்கம் அல்ல’ – அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “திராவிட மாடல் ஆட்சியில் தென் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 515 கோடி ரூபாய் மதிப்பில் நெருஞ்சாலைகளில் 281 கிலோமீட்டருக்கு சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 200 பணிகள் முடிவுற்றன, மீதமுள்ள பணிகள் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும், நடப்பு ஆண்டில் 111 கோடி ரூபாய் மதிப்பில் 30 சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எ.வ வேலு

மக்களுக்கான திட்டங்களில் முதல்வர் அ.தி.மு.க, தி.மு.க என பிரித்து பார்க்க மாட்டார். 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல்வர் திட்டங்களை செய்து வருகிறார், மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அப்போலோ மேம்பாலப் பணிகள் 30 சதவிகிதமும், கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 15 சதவிகிதமும் முடிவுற்றுள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அவசர கோலத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாலும், விபத்துகள் நடைபெறுகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் விதிமுறைகளை மீறி 70 ரயில்வே மேம்பாலங்கள் அவசர கோலத்தில் கட்டப்பட்டன. தற்போது நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள 30 ரயில்வே மேம்பாலங்களின் பணிகள் முடிக்கப்பட்ட்டுள்ளன. நில எடுப்புக்காக 5 சிறப்பு டி.ஆர்.ஓ-க்கள் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

அவனியாபுரம் முதல் நெல்ப்பேட்டை வரையில் மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது, தெற்கு வாசல்-வில்லாபுரம் இடையே கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்.

எ.வ.வேலு

நடிகர் விஜய்யின் கட்சி மற்றும் படத்தை தி.மு.க தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது தி.மு.க-வின் நோக்கம் அல்ல, தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காக தி.மு.க பாடுபட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க தொடங்கப்படவில்லை, தமிழர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும்.

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் தொடங்கி செயல்படுகிறது, சில கட்சிகள் தொடங்கி காணாமல் போயிருக்கிறது, ஆகவே நாங்கள் யாரைக் கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம். அவர்களை தடுக்கவும் மாட்டோம், முடிந்தால் வாழ்த்து சொல்வோம், மக்களின் உரிமைகளுக்காக எந்த கட்சி உறுதுணையாக இருக்கிறது என்பதை பொறுத்து, தேர்தலில் அந்த கட்சியை மக்கள் ஆதரிக்கிறார்கள், மக்கள் ஏற்றுக் கொண்டால் அந்தக் கட்சியினர் தொடர்ந்து செயல்படுவார்கள்” என்றார்.