`வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்; இல்லையென்றால்..!’ – பாஜக-வை எச்சரிக்கும் சீமான்

நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

மசூதி

இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்திருக்கிறார். இது குறித்த அறிக்கையில், “இஸ்லாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே புதிய வக்பு வாரிய திருத்தச்சட்ட வரைவாகும். ஓர் இறையை ஏற்று, நபி வழி நின்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றி வருபவர்கள், தாங்களாக விரும்பி இறை வழிபாட்டுப் பணிகளுக்கோ, அல்லது இறைவன் திருப்பெயரால் மக்கள் தொண்டு செய்வதற்கோ மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளே ‘வக்பு’ என்பதாகும்.

இந்தியா என்றொரு நாடு விடுதலைப்பெற்று ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியச் செல்வந்தர்கள் பெருமளவில் தானமாக அளித்த நிலங்களே வக்பு நிலங்களாகும். அவை முழுக்க முழுக்க இஸ்லாமியப் பெருமக்களது இறை வணக்கப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நில உடைமைகளாகும். அவ்வாறு இஸ்லாமியச் செல்வந்தர்களால் இஸ்லாமிய இறைப்பணிக்காக வழங்கப்பட்ட உடைமைகளைப் பாதுகாக்க இஸ்லாமியச் சான்றோர்களால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளைகள்தான் வக்பு அமைப்புகள் ஆகும்.

சீமான்

இந்தியா விடுதலைப்பெற்ற பிறகு வக்பு அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்பு சொத்துக்களைப் பாதுகாக்கவும், நேர்மையாக நிர்வகிக்கவும் 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. தற்போது நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 லட்சத்திற்கும் அதிகமான வக்பு அறக்கட்டளைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை ஒருங்கிணைக்கவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அந்தந்த மாநில அரசின் கீழ் வக்பு வாரியங்கள் செயல்பட்டுவருகின்றன. மேலும், வக்பு சட்டத்திலிருந்த குறைபாடுகளைக் களைவதற்காக ஏற்கனவே 1959, 1964, 1969, 1995-ம் ஆண்டுகளில் தேவையான திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. இறுதியாக 2013-ம் ஆண்டு வக்பு சட்டத்தைப் பல்வேறு நிலைகளில் ஆய்ந்து, அதிலிருந்த ஒருசில குறைகளையும் நீக்கத்தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, முழுமையான வக்பு சட்டம் தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், இந்து மதத்தினரிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக பா.ஜ.க மேற்கொள்ளும் மதவெறி சூழ்ச்சியே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவாகும். அதன்படி இஸ்லாமிய சமய சொத்துக்களைப் பாதுகாக்க முழுக்கவும் இஸ்லாமியர்கள் அங்கம் வகித்த வக்பு வாரிய குழுக்களில், புதிதாக 2 மாற்று மதத்தினரை நியமிக்கவும், வக்பு வாரிய நிலங்களை 12 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்திருந்தால், அந்த நிலங்களை ஆக்கிரமித்தவர்களே சொந்தமாக்கி பட்டா பெற்றுக்கொள்ள முடியும் என்பது உள்ளிட்ட 40 திருத்தங்களைக் கொண்டுவந்து வக்பு வாரியத்தின் அதிகாரங்களை முற்று முழுதாக நீர்த்துப்போகச் செய்ய பா.ஜ.க அரசு முயல்கிறது.

அமித் ஷா, மோடி

குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களை நிலமற்ற அகதிகளாக, நாடற்ற நாடோடிகளாக மாற்றவே இதை பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களை அந்நியமானவர்கள் என்று நிறுவத் துடித்த மதவாத பா.ஜ.க அரசின் முயற்சிக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது இஸ்லாமிய சமயத்தவரிடம் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் வக்பு நிலங்களாகும். இந்தியாவிலேயே பாதுகாப்புத்துறை மற்றும் தொடர்வண்டித்துறைக்கு அடுத்தபடியாக ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலமுடையவர்களை இந்த நாட்டுக்குத் தொடர்பில்லாதவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவேதான் சட்டத்தின் மூலம் அதை அபகரிக்க நினைக்கிறது பாசிச பா.ஜ.க அரசு.

வக்பு வாரியம் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும். ஒன்றிய மற்றும் மாநில அளவில் வக்பு வாரியங்கள் உள்ளன. அதில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுபவர்கள். வக்பு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகள் தவறெனக் கருதினால் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடும் செய்ய முடியும். எனவே, வக்பு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகளுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதும், வக்பு வாரியம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத கட்டற்ற அதிகாரம் படைத்த தன்னாட்சி அமைப்பு போலவும் பா.ஜ.க பரப்புவது அனைத்தும் பச்சைப் பொய்யாகும்.

பாஜக

உண்மையில் வக்பு சொத்துக்களால் பயனடைவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. குத்தகைக்கு விடப்பட்டுள்ள வக்பு வாரிய நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள வணிகக் கடைகள், மண்டபங்கள், ஓய்வெடுக்கும் அறைகள், மருத்துவ சேவைகள், அவசர ஊர்திகள், பேரிடர்காலத் துயர்துடைப்பு உதவிகள் என அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அதைவிட அதிகமாக இந்து மக்களுக்கும், ஏனைய மதத்தினருக்கும் உதவவும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நடைமுறை உண்மையாகும். வக்பு சட்டத்தில் குறைகள் உள்ளது என்றால் அதைக் கூற வேண்டியது இஸ்லாமியப் பெருமக்கள்தான். தங்களுக்கு இத்தகைய திருத்தங்கள் வேண்டும் என்று கேட்க உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான்.

ஒரு சில இடங்களில் நடைபெற்ற தவறுகளை வைத்து ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்க நினைப்பது என்ன நியாயம்? ஒரு இந்து மடத்தில் தவறு நடந்தால் ஒட்டுமொத்த இந்து மடங்களையும் பா.ஜ.க அரசு மூடிவிடுமா? அல்லது மாற்று மதத்தினரை இந்து மடங்களில் நிர்வாகிகளாக நியமிக்கத்தான் அனுமதிக்குமா? நிர்வாகத்தில் ஊழல் என்பதற்காக சங்கரமடத்தையும், சிதம்பரம் கோயிலையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்றால் அதனை பா.ஜ.க ஆதரிக்குமா? வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களே அதனைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற மோடி அரசின் முடிவு, கோயில் நிலங்களுக்கும் பொருந்துமா?

மோடி – சீமான்

சச்சார் குழு கொடுத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகக் கூறும் பா.ஜ.க அரசு, இஸ்லாமியர் நலன் காக்க சச்சார் குழு கொடுத்த அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றத் தயாரா? என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க உரிய விளக்கமளிக்க வேண்டும். எனவே, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை உடனடியாக பா.ஜ.க அரசு திரும்பப்பெறாவிட்டால், எப்படிக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியப் பெருமக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றுதிரண்டு போராடினார்களோ, எப்படி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடித் திரும்பப்பெறச் செய்தார்களோ, அப்படி இதற்கெதிராகவும், நாடு முழுவதும் மிகப்பெரிய மக்கள் திரள் புரட்சி போராட்டங்களை பா.ஜ.க அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்” என்று சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.