விழுப்புரம்: பழுதடைந்த கட்டடங்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய சுற்றுச்சுவரா?! – குமுறும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட கிராமம் கொங்கம்பட்டு. இந்தக் கிராமத்துக்கென 2009-ம் ஆண்டு சமுதாயக்கூடம், நூலகக் கட்டடம் கட்டப்பட்டன. இந்த நூலகத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்திவந்தனர். சமுதாயக்கூடத்தையும் சிறு சிறு விழாக்கள் நடத்துவதற்கு கிராம மக்கள் பயன்படுத்திவந்தனர். இந்த நிலையில், 2014-ம் ஆண்டு அந்தக் கட்டடங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

பயன்பாட்டில் இல்லாத கட்டடம் – கொங்கம்பட்டு
பயன்பாட்டில் இல்லாத கட்டடம் – கொங்கம்பட்டு

எனினும், அதன் பிறகு இரண்டு வருடங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்தக் கட்டடங்கள், தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லை. சரியான பராமரிப்பு இல்லாததால், அந்தக் கட்டடங்களும், அதன் கதவுகள், ஜன்னல்கள், மின்விசிறி, மின்விளக்கு, கழிப்பறை என அனைத்தும் பழுதடைந்துவிட்டன. 2023-ம் ஆண்டு நூலகக் கட்டடத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், நூலகத்தில் இருந்த புத்தகங்களை வேறோர் இடத்துக்கு மாற்றி, கட்டடத்துக்கு வர்ணம் மட்டும் அடித்து முடித்ததாகக் குற்றம்சாட்டும் அந்தப் பகுதி மக்கள், அப்போது முதல் அந்த நூலகமும் செயல்பாட்டில் இல்லை என்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, பல மாதங்கள் செயலற்றுக் கிடந்த அந்த நூலகத்துக்கு, மீண்டும் புத்தகங்கள் வழங்க வேண்டுமென கிராமப் பொதுமக்கள் ஊர்த் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் படிக்கக்கூட நூலகத்தில் எந்தப் புத்தகமும் இல்லை எனப் பொதுமக்களும் மாணவர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த இரண்டு கட்டடங்களும் செயலற்று இருக்கும்போது, அதற்கு அருகில் 2018-ம் ஆண்டு ரூ.13 லட்சம் மதிப்புள்ள ‘பொது சேவை மையம்’ கட்டடம் கட்டப்பட்டது. அதுவும் பூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அந்தக் கட்டடம் எதற்காகக் கட்டப்பட்டது என்பதுகூடத் தெரியாத சூழல்தான் நிலவுகிறது.

பயன்பாட்டில் இல்லாத கட்டடம் – கொங்கம்பட்டு

இந்தக் கட்டடங்களுக்கு அருகில் 2008-ம் ஆண்டு கட்டித் தரப்பட்ட விளையாட்டு மைதானத்தையும், பொது கழிப்பறையையும் 10 வருடங்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது போன்ற எந்த நிகழ்வும் நடந்ததாகத் தெரியவில்லை எனவும், புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் தரமாகவும் இல்லை, மக்கள் பயன்பாட்டிலும் இல்லை எனவும் கிராம மக்கள் நொந்துகொள்கிறார்கள்.

இந்த நிலையில்தான், மக்கள் பயன்பாட்டில் இல்லாத இந்தக் கட்டடங்களுக்கு 2023-ம் ஆண்டு ரூ.6,25,000 மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருக்கிறது. மக்கள் பயன்பாட்டில் இருந்து, தற்போது செயலற்று இருக்கும் இந்தக் கட்டடங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில், மறுசீரமைக்கப்பட வேண்டும் என மாணவர்களும் பொதுமக்களும் அரசிடம் கோரிக்கை முன்வைக்கின்றனர். மாணவர்களின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளுமா?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88