Co-optex:10வது தேசிய கைத்தறி நாள்; மாநில அளவில் திறன்மிகு நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா!

பத்தாவது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு மாநில அளவில் திறன்மிகு நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 60 விருதாளர்களுக்கு 4.00 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நெசவாளர் நலத்திட்டத்தின்கீழ் நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7ஆம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாரம்பரியம் மற்றும் நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2015 ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அவ்வகையில் 07.08.2024 அன்று 10-வது தேசிய கைத்தறி நாள் சென்னை, எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் தலைமையேற்று நடத்தி சிறப்பித்தார்கள். இவ்விழாவில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கைத்தறி துறையின் மூன்றாண்டு சாதனைகள் புத்தகத்தினை வெளியிட்டார்கள். 

கைத்தறி நெசவாளர்கள்

2023-2024ஆம் ஆண்டில் சிறந்த வேலைப்பாடு கொண்ட இரகங்களை திறம்பட நெசவு செய்த நெசவாளர்களை கெளரவிக்கும் வகையில், 20 கைத்தறி இரகங்களில், இரகத்திற்கு தலா 3 விருதாளர்கள் வீதம் 60 விருதாளர்களுக்கு 4.00 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் திறன்மிகு நெசவாளர் விருதுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.   

நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் வீதம் 20 இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 20 பயளாளிகளுக்கு மாதம் ரூ.1200/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் காலஞ்சென்ற நெசவாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு மாதம் ரூ.1200/- வீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.15.25 இலட்சம் மதிப்பில் கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டது.

மேலும், குழும வளர்ச்சித் திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 23 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பில் தறி உபகரணங்கள், குழும வளர்ச்சி திட்டத்தின்கீழ் 16 கைத்தறி குழும வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் 7 கைத்தறி வடிவமைப்பாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.30,000/- வீதம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கைத்தறி நெசவாளர்களால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட கைத்தறி இரகங்களும், திறன்மிகு நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கண்கவர் கைத்தறி இரகங்களும் அழகுற காட்சிப்படுத்தப்பட்டது. 

10-வது தேசிய கைத்தறி நாளையொட்டி தமிழ்நாடெங்கும் சிறப்புடன் கொண்டாடும் வகையில் சரக அளவில் அமைந்துள்ள 20 கைத்தறி துறை சார்நிலை அலுவலகங்கள் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கல்லூரிகளில் கைத்தறி நாள் விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 69 பயனாளிகளுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 226 இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள்,

கைத்தறி நெசவுக்கூடம்

முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 92 பயளாளிகளுக்கு மாதம் ரூ.1200/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள், நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் காலஞ்சென்ற நெசவாளர்களின் 40 வாரிசுதாரர்களுக்கு மாதம் ரூ.1200/- வீதம் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 407 பயனாளிகளுக்கு ரூ.263 இலட்சம் மதிப்பில் கடனுதவி ஆணைகள், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 229 பயனாளிகளுக்கு 191 இலட்சம் ரூபாய்க்கான பணப்பலன் ஆணைகள், குழும வளர்ச்சித் திட்டம் மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 67 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூபாய் 14 இலட்சம் மதிப்பிலான தறி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இத்துடன் மூத்த நெசவாளர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

மேலும், கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில்  கைத்தறி கண்காட்சிகள், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. 

இவ்விழாவில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்கள்,

CoOptex: நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா!

மாண்புமிகு சென்னை பெருநகர மேயர் திருமதி. ஆர். பிரியா, மதிப்பிற்குரிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், மதிப்பிற்குரிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ. பரந்தாமன், மதிப்பிற்குரிய சென்னை பெருகர துணை மேயர் திரு. எம். மகேஷ் குமார், மதிப்பிற்குரிய பெருநகர சென்னை மாநகராட்சி 61வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. பாத்திமா முசாபர் அஹமது, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர்

திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., கைத்தறி துறை இயக்குநர் திரு. அ. சண்முக சுந்தரம். இ.ஆ.ப., கோ-ஆப்டெக்ஸ் செயலாட்சியர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கோஆப்டெக்ஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.