`திருமணம் செய்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டார்’ – வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் புகார்

திருமணம் செய்துகொள்வதாக பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, ராஜஸ்தான் வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்படும் ராஜஸ்தான் வழக்கறிஞர் மனவ் சிங் ரத்தோருக்கும் முதலில் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை

அதன்பின்னர், ரத்தோரின் அழைப்பின் பேரில் இந்தியா வந்த அமெரிக்க பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்த அவர் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரிலுள்ள ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டார். பிறகுதான், ரத்தோருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குடும்பம் இருப்பது அமெரிக்க பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி (Bundi) நகர காவல் கண்காணிப்பாளரை அணுகி, ரத்தோர் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருப்பதை மறைத்து, திருமணத்தின் பேரில் தன்னிடம் உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். புகாரின்படி, ரத்தோர் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர்.

காவல்துறை

இதுகுறித்து ஊத்திடம் பேசிய பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் அமர் சிங், “புகாரளித்த பெண் ஏப்ரல் முதல் ஜூலைக்குள் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ரத்தோர் திருமணம் செய்துகொள்வதாக தன்னிடம் பொய் வாக்குறுதியளித்து அஜ்மீர், ஜெய்ப்பூர் ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டதாகவும், பிறகுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அஜ்மீரில் குடும்பத்துடன் வசித்துவருவது தெரிந்ததாகவும் அந்தப் பெண் புகாரளித்திருக்கிறார். இடையில், அஜ்மீரில் ஒரு கோயிலில் அந்தப் பெண்ணுடன் அவர் திருமண நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனாலும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வதை அவர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.