ஸ்ரீவில்லிபுத்தூர்: `பாலியல் குற்றத்துக்கு 20 ஆண்டு; பண மோசடிக்கு 26 ஆண்டு’ – பரபரத்த நீதிமன்றங்கள்!

பண மோசடி வழக்கில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு தலா 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த பரபரப்பு தீர்ப்பு குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கடந்த 2018ம் ஆண்டு, விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்சி நடத்திவந்தவர் சேது என்ற சேதுராமன் (50). இவரிடம், கற்பகம் எனும் பெண் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில், வெளிநாட்டில் வேலைசெய்ய விரும்பும் படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு எனும் பெயரில் விளம்பரம் செய்துள்ளார்.

இதை நம்பி விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், சேதுராமனை அவரின் அலுவலகத்துக்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது, பேசிய சேதுராமன், ‘உங்கள் விருப்பப்படியே வெளிநாட்டில் வேலைவாங்கி தருகிறோம். ஆனால் விசா, நேர்முகத்தேர்வு போன்ற அடுத்தடுத்த முயற்சிகளுக்கு முன்பணம் கட்டவேண்டும்’ எனக் கூறியுள்ளார். சேதுராமனின் நயமான பேச்சை நம்பிய கிருஷ்ணமூர்த்தியும், அவர் கேட்டபடி முன்பணம் கொடுத்துள்ளார். இதேப்போல விருதுநகர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 13 நபர்களிடம் வெளிநாட்டு வேலை ஆசைக்காகட்டி அவரவர் சக்திக்கு ஏற்றார்போல 20,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பல லட்சங்களை சேதுராமன் முன்பணமாக பெற்றுள்ளார். ஆனால், தான் உறுதி அளித்தபடி யாருக்கும் எந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அவர் பெற்றுத்தரவில்லை.

நீதிமன்றம்

சொன்னபடி வேலை பெற்றுத்தராமல் சேதுராமன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகம் அடைந்த நபர்கள், அவரை சந்தித்து தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்த சேதுராமன், அதன்பிறகு தலைமறைவானார். இதையடுத்தே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சேதுராமன் பணமோசடி செய்தது குறித்து புகார் அளித்தனர். இந்தபுகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சேதுராமனையும், அவரின் அலுவலகத்தில் பணிபுரிந்த கற்பகம் என்ற பெண்ணையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விருதுநகர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சேதுராமன், கற்பகம் ஆகிய இருவருக்கும் தலா 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதாடினார்” என்றனர்.

விஜி

இதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற விரைவு மகிளா கோர்ட்டில் பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புல்லூர் காரியாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜய் என்ற விஜி (26). இவர் கடந்த 2022ம் ஆண்டில், 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து சிறுமியின் தாய், காரியாபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விஜி கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜய் என்ற விஜியைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜராகி வாதாடினார்” என்றனர்.