France: பிரான்ஸ் தேர்தல் முடிவுகளில் இழுபறி; முடிவெடுப்பதில் நிலவும் சிக்கல்கள் – அடுத்தது என்ன?!

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிரான்ஸ் தேர்தல்

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு ஜூன் 30-ம் தேதி, ஜூலை 7-ம் தேதி என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இது, ஐரோப்பாவில் நடைபெறும் முக்கியமான தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் இமானுவல் மேக்ரன் தலைமையிலான மையவாதக் கூட்டணி, வலதுசாரிக் கூட்டணியான தேசியப் பேரணி கூட்டணி, இடதுசாரிக் கூட்டணியான புதிய மக்கள் முன்னணி ஆகியவை தேர்தலில் போட்டியிட்டன.

வலதுசாரிக் கூட்டணியான தேசியப் பேரணியே ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தேசியப் பேரணிக்கு கட்சிக்கு இனவெறி கொண்ட கட்சி, வெளிநாட்டினர் மீதான வெறுப்புணர்வு கொண்ட கட்சி என்ற இமேஜ் உண்டு. ஆகவே, அந்தக் கட்சி பிரான்ஸில் ஆட்சியமைத்தால், அது ஐரோப்பிய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் பலரால் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வலதுசாரிக் கூட்டணி 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இமானுவல் மேக்ரான்

பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, இடதுசாரி கட்சிகள் தலைமையிலான புதிய மக்கள் கூட்டணி 182 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதிபர் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கட்சி 168 இடங்களிலும், வலதுசாரிக் கட்சி 143 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன.

2017-ல் நடைபெற்ற தேர்தலில் 57 தொகுதிகளில் வென்ற இடதுசாரிகள், அடுத்து 2022-ல் நடைபெற்ற தேர்தலில் 131 இடங்களில் வெற்றிபெற்றனர். தற்போது 182 இடங்களை இடதுசாரிகள் பெற்றிருக்கிறார்கள். தீவிர வலதுசாரிகளின் பிடிக்கு பிரான்ஸ் போய்விட்டதாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில், இந்தத் தேர்தலில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

தேசிய பேரணி கூட்டணித் தலைவர் மரைன் லு பென்

அதே நேரம், ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலவுகிறது. நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் மையவாதக் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், அங்கு நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு கீழவைதான் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும். ஆகவே, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததது பிரான்ஸ் நாட்டில் அரசியல் குழப்பதை ஏற்படுதியிருக்கிறது.

இந்த குழப்பமான சூழலில், அடுத்த அதிபர் யார் என்பது தெரியவில்லை. தொங்கு நாடாளுமன்றம் போன்ற ஒரு சூழலை பிரான்ஸ் நாடு சந்திப்பது இதுவே முதன்முறை.பிரான்ஸ் அரசியலில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பாரீஸ், நான்டெஸ், லியோன் உள்பட பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தேர்தல்

கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் தொடங்கும் என்றும், அது தொடர்பான ஆலோசனைகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, தீவிர இடதுசாரி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று அதிபர் மேக்ரான் அறிவித்திருக்கிறார். எனவே, மிதவாத இடதுசாரி கட்சிகளைக் கூட்டணிக்கு அவர் அழைக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், மிதவாத இடதுசாரி கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைத்தாலும், கொள்கை முடிவுகளை எடுப்பதில் அந்தக் கட்சிகளின் கருத்துக்களுடன் இணைந்தே முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனவே, கூட்டணி அரசு குறித்து அதிபர் மேக்ரான் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆக, பிரான்ஸில் புதிய அரசு அமைவதற்கு இன்னும் சில காலதாமதங்கள் ஏற்படும் என்றே தெரிகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88