2014-ல் இருந்து தொடரும் ‘பங்கு’ பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள்?

ஒன்றுபட்ட ஆந்திராவிலிருந்து பிரித்து, 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இரு மாநிலங்களாகப் பிரிந்த பிறகு, பல பிரச்னைகளுக்கு தீர்காணப்படவில்லை. இந்த நிலையில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் ஹைதராபாத்தில் ஜூலை 6-ம் தேதி சந்தித்தனர். அப்போது, இரு மாநிலங்களையும் சேர்ந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ரேவந்த் ரெட்டி

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள் சத்ய பிரசாத், ஜனார்த்தன் ரெட்டி, கண்டுல துர்கேஷ், தலைமைச்செயலாளர் நீரப் குமார் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, அமைச்சர்கள், ஸ்ரீதர் பாபு, பொன்னம் பிரபாகர், தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி ஆகியோர் பங்கேற்றனர்.

இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் அரசு கட்டடங்கள், நிலங்கள் குறித்த சொத்துப் பிரச்னைகள், துறை ரீதியான பிரச்னைகள், ஆந்திர மாநில பைனான்ஸ் கார்ப்பரேஷன் குறித்த நடவடிக்கை, நிலுவையில் இருக்கும் மின்சார கட்டண பாக்கிகள் என்று பல பிரச்னைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மோடி – சந்திரபாபு நாயுடு

வெளிநாட்டு நிதியின் கீழ் இரு மாநிலங்களிலும் 15 அணைகள் கட்டப்பட்டன. அவற்றுக்கான கடன் பங்கீடு, கூட்டுத் துறைகளின் செலவுகள், ஹைதராபாத்தில் இருக்கும் மூன்று முக்கிய கட்டடங்களை ஆந்திராவுக்கு வழங்குவது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழுவில் அங்கம் வகிப்பது, ஆந்திர அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தெலங்கானா அமைச்சர்கள், எம்பி., எம்.எல்.ஏ-க்களுக்கும் திருப்பதி தரிசனத்தில் உரிமை வழங்குவது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பங்கீட்டில் நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பது, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரம் என்று 10 அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாடுகள் குறித்து மத்திய அரசிடம் பேசி செயல்படுத்துவது, இரு மாநிலங்களையும் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அமைப்பது, தீர்வுகாணப்படாத பிரச்னைகளை அமைச்சர்கள் ரீதியிலான குழுக்களுக்கு கொண்டுசெல்வது, சில பிரச்னைகளை முதல்வர்களைக் கொண்ட உயர் மட்டக்குழுவுக்கு அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மோடி, ரேவந்த் ரெட்டி

இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட காரணத்தால், சுமார் 70 பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டி இருப்பதாகவும், அவற்றில் சுமார் 50 பிரச்னைகள் அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்கப்படக்கூடியவை என்றும் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. அரசியல் உறுதி இல்லாத காரணத்தினாலேயே கடந்த பத்தாண்டு காலமாக இந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு கட்டங்களில் கூட்டங்கள் நடைபெற்றும் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், ஆந்திராவின் முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, இரு மாநிலங்களிடையே தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது சம்பந்தமாக தெலங்கானா முதல்வருக்கு ஜூலை 1-ம் தேதி கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு ரேவந்த் ரெட்டி உடனடியாக பதில் எழுதினார்.

சந்திரபாபு நாயுடு

அதில், ‘இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கும், நல்லுறவுக்கும் நேரில் சந்தித்துப் பேசுவது அவசியமானது’ என்று ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். அதையடுத்து ஹைதாராபாத்தில் இரு மாநில முதல்வர்கள் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது.

இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் சந்திரபாபு, ரேவந்த் ரெட்டி ஆட்சிக் காலத்தில் தீர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், உயர் நீதிமன்றம், ஆளுநர் மாளிகை உள்பட 142 சொத்துகள் குறித்து முடிவெடுக்கப்பட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் மத்திய அரசு குழுவை அமைத்தது. 142 சொத்துகளைப் பிரித்துக்கொள்வது தொடர்பாக தனது அறிக்கையை அந்தக் குழு அளித்தது. அந்த அறிக்கையை தெலங்கானா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகின.

ரேவந்த் ரெட்டி

இப்படியாக பல சிக்கல்கள் இதில் இருக்கின்றன. ஆனாலும், இரு மாநில முதல்வர்களிடையே சுமூக உறவு இருப்பதாலும், இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருவருக்கும் இருப்பதாலும் இவர்களின் ஆட்சிக் காலத்திலேயே பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88