Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை; தமிழ்நாடு அரசுக்கு பா.ரஞ்சித் எழுப்பும் `6′ கேள்விகள்!

தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் எனக் குரலெழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமாக நடந்துகொள்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Armstrong: ஆம்ஸ்ட்ராங் – மாயாவதி

பா.ஜ.க நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன், “இது திராவிட மாடலா அல்லது கொலை மாடலா… தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள் நடந்துவருகிறது. இனிமேலும் ஸ்டாலின் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பது சாமானிய மக்களுக்கும் தெரிகிறது” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கான பாதுகாப்பு குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை அரசு விரைவில் கைதுசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஆம்ஸ்டராங் கொலை சகித்துகொள்ள முடியாதது. இது ஒரு கோழைத்தனமான கொலை. தமிழ்நாட்டில் இது போன்ற தலித் தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது கவலையளிக்கிறது. தமிழ்நாடு அரசு உண்மையான குற்றவாளிகளை, கூலிப்படை தலைவர்களை, அவர்களை இயக்கியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.” எனக் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆம்ஸ்ட்ராங் – திருமாவளவன்

இதற்கிடையே தமிழ்நாடு காவல்துறை, `ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை’ என விளக்கமளித்திருக்கிறது.

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்னை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம்.

அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைதள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் சில கேள்விகள்:

1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்கப் போகிறீர்கள்?

பா.ரஞ்சித்

2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல்துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல்துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்?

இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல்துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?

முதல்வர் ஸ்டாலின்

3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.

Armstrong: ஆம்ஸ்ட்ராங்

5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?

6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்னையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைதளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைதள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?” எனக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb