`திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள சம்பளம் தரவேண்டும்; அந்தப் பணம்..!’ – மத்திய அமைச்சரான சுரேஷ் கோபி

கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற முதல் எம்.பி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் சுரேஷ் கோபி. அவருக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாவுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி இணை அமைச்சராக பதவி ஏற்றபிறகு துறை ஒதுக்கப்படுவதற்கு முன், ‘நான் சினிமாவில் நடிக்க வேண்டும். எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை’ எனக்கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். அப்போது அவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறின.

குருவாயூரில் சுரேஷ்கோபிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சுரேஷ் கோபி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் குருவாயூர் மண்டல கமிட்டி சார்பில் அமைச்சர் சுரேஷ் கோபிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “இனி இரண்டு ஆண்டுகள் நாம் தேர்தல் பிரசாரம்தான் செய்ய வேண்டும். 2025 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் செமி ஃபைனலாகும். நல்லகாரியங்கள் இன்னும் நிறைய நடக்கும்.

நான் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். சுரண்டி பிழைக்க நான் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் 5 முதல் 8 சதவிகிதம் தொகையை நான் நல்லகாரியங்களுக்கு செலவு செய்கிறேன். அதற்கான உரிமை எனக்கு உண்டு. அப்படி வரும் பணத்தை நான் தனிநபர்களுக்கு கொடுக்கமாட்டேன். மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்வேன். அதற்காக வேறு யாரிடமும் பணம் வசூலிக்கமாட்டேன். ஒருவகையில் மட்டும் பணம் வசூல் நடத்தப்படும். தனியார் திறப்பு விழாக்களுக்கு எம்.பி-யை வைத்து திறக்கலாம் என நினைக்க வேண்டாம். திறப்பு விழாவுக்கு சினிமா நடிகராகத்தான் வருவேன். அதற்கு ஏற்ற சம்பளம்  வாங்கிவிட்டுதான் வருவேன். என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்பு விழாவுக்கு போவேன்.

மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி

திறப்பு விழாக்களுக்கு செல்லும்போது கிடைக்கும் பணத்தில் ஒரு நயா பைசா கூட நான் எடுக்கமாட்டேன். அது எனது டிரஸ்டுக்கு போகும். டிரஸ்ட் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். திருச்சூரில் உள்ள மக்கள் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார்கள். கட்சி எனக்கு வழங்கியுள்ள கடமையை நிறைவேற்ற எனக்கு தெரியும். அதை செய்வதற்கு யாருடய அறிவுரையும் எனக்கு தேவையில்லை.  அதை நடத்துவதற்காக திறமை எனக்கு உண்டு. இறைவன் அருள் இருந்தால் அதற்கு மேலேயும் செய்வேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88