`திரும்பி வர விரும்புவர்கள் வரலாம்..!’ – அஜித் பவார் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சரத் பவார் அழைப்பு

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் தலைமையில் புதிய அணி உருவானது. அஜித் பவார் கட்சிக்கு 39 எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டது. அப்படி இருந்தும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அஜித் பவார் தலைமையிலான கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் அஜித் பவார் கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் சிலர் சரத் பவார் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.

அவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து சரத் பவார் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”கட்சிக்கு திரும்ப வர விரும்பும் எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக வரலாம். அவர்கள் கட்சியை வலுப்படுத்துபவர்களாகவும், கட்சியின் மதிப்பை உயர்த்துபவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்களுக்காக கட்சியின் கதவு திறந்தே இருக்கிறது. சிலர் கட்சியில் பயனடைந்துவிட்டு கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனவே கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பேன்”என்று தெரிவித்தார்.

இதேபோன்று முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இருந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு வர 3 எம்.எல்.ஏ.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து உத்தவ் தாக்கரே இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஏக்நாத் ஷிண்டே

கடந்த சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.கவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் சூர்யகாந்தா பாட்டீல் மீண்டும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சியில் சேர்ந்தார். அவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தார். 4 முறை எம்.பி.யாக இருந்துள்ள சூர்யகாந்தா பாட்டீல் நாண்டெட், பர்பானி, ஹின்கோலி, ஜல்னா போன்ற மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார். அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகியது மராத்வாடா பகுதியில் பா.ஜ.க-வுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தலில் ஹின்கோலி தொகுதியில் போட்டியிட சூர்யகாந்தா பாட்டீல் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அத்தொகுதியை பா.ஜ.க முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88