கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 25-ம் தேதியன்று கோர் டீமிலிருந்து 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
கூகுளின் கோர் டீம் ஊழியர்கள், நிறுவனத்தின் முதன்மை தயாரிப்புகளுக்கு தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதோடு, அதனை பயன்படுத்துபவர்களின் ஆன்லைன் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர்.
இந்த கோர் டீம் தகவல் தொழில்நுட்பம், பைதான் டெவலப்பர், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, செக்யூரிட்டி ஃபவுண்டேஷன், ஆப் பிளாட்ஃபார்ம், கோர் டெவலப்பர், இன்ஜினீயர் போன்ற முக்கியமான தொழில்நுட்ப துறைகளை உள்ளடக்கியுள்ளது.
பணிநீக்கத்திற்கான காரணம் என்ன?!
கூகுள், கோர் டீமிலுள்ள 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள கூகுளின் சன்னிவேல் அலுவலகங்களில் குறைந்தபட்சம் 50 என்ஜீனியர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தனது பணியாளர்களில் 6% பேரை அகற்ற உள்ளதாக அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக தற்போதைய பணிநீக்கம் நடைபெற்றுள்ளது.
இந்தியா மற்றும் மெக்சிகோவில் உள்ள கோர் குழுக்களின் முக்கியமான பணிகளை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.