ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வண்ணாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி மாசிலாமணி. இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள் உள்ளனர். அதே பகுதியில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் கணவன், மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர். அதே மில்லில் பணியாற்றி வரும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழன் என்பவருக்கும், மாசிலாமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழனின் கடனை அடைப்பதற்காக தனது வீட்டில் இருந்த 10 சவரன் நகையை மாசிலாமணி கொடுத்துள்ளார். இதனிடையே மாசிலாமணியின் மகள் வயதுக்கு வந்ததையொட்டி, அதற்காக விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவின்போது மகளுக்கு அணிவிக்க நகை தேவைப்படும் என்பதால் விழாவை எப்படி நிறுத்துவது என்று தனது ஆண் நண்பரான தமிழனுடன் மாசிலாமணி ஆலோசனை செய்துள்ளார்.
இதனிடையே, தங்கமணியின் உறவினரான வண்ணாங்காட்டுவலசில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 75 வயதுடைய பழனிசாமி, கடந்த 19-ஆம் தேதி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பழனிசாமியின் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் உடலில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பழனிசாமியை மாசிலாமணி தனது ஆண் நண்பரான தமிழன் மற்றும் மகனுடன் சேர்ந்து அரிவாளல் வெட்டிக் கொலை செய்து உடலை தீயிட்டு எரித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாசிலாமணி அவரது ஆண் நண்பர் தமிழன் மற்றும் அவரது 17 வயது மகன் உட்பட 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில், நெருங்கிய உறவினர் இறந்தால் நீராட்டு விழாவை நிறுத்தி விடலாம். விழாவை நிறுத்திவிட்டால் நகை குறித்து கணவர் எதுவும் கேட்கமாட்டார் என மாசிலாமணி, தமிழன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தனியாக வசித்து வந்த பழனிசாமியை திட்டமிட்டு கொலை செய்ததுள்ளது தெரியவந்துள்ளது.