‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சொத்துக்கள் சிலரிடம் மட்டுமே குவிவதைத் தடுத்து, பலருக்கும் பகிர்ந்தளிக்கும் (Redistribution of wealth)’ என்று பிரசாரத்தின்போது பேசியிருந்தார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி. இதைக் கையில் எடுத்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘கஷ்டப்பட்டு நீங்கள் சேர்த்த சொத்துக்களெல்லாம் உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்காத வகையில் மறுவிநியோகம் செய்யப் பார்க்கிறது காங்கிரஸ்‘ என்று பேசி இருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் நிர்வாகியுமான சாம் பிட்ரோடா, இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘நாட்டின் வளங்களைப் பகிர்ந்தளிப்பது என்று சொன்னால், சிலரிடம் இருக்கும் சொத்துக்களை எடுத்துக்கொள்வது என்று அர்த்தம் இல்லை. நாட்டின் வளங்கள் ஒரு சிலரிடம் மட்டும் தொடர்ந்து குவிவதைத் தடுப்பதுதான்’ என்றதுடன், அமெரிக்காவின் ‘பரம்பரை வரி’ (Inheritance tax) என்பது பற்றியும் குறிப்பிட்டார்.

‘உதாரணமாக, அமெரிக்காவில் ஒருவர் 100 மில்லியன் டாலர் சம்பாதித்து வைத்துவிட்டு இறந்தால், அவர் வாரிசுகளுக்கு அந்தச் சொத்துக்கள் செல்லும்போது, அதில் 55% வரியாக அரசுக்குக் கட்ட வேண்டும். மீதமுள்ள 45% மட்டுமே வாரிசுகளுக்கு. நாட்டின் வளங்கள் சிலரின் கைகளில் மட்டுமே குவியாமல் தடுக்கவே இப்படியொரு வழிமுறை. இந்தியாவிலும் இதைப்பற்றி நிறைய ஆலோசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும்’ என்றும் சொன்னார் பிட்ரோடா.

இந்த விஷயமும் காங்கிரஸுக்கு எதிரானதாகப் பரப்பப்படவே… ‘எங்கே நம்முடைய வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்துவிடுமோ’ என்று பயந்துபோய், ‘பிட்ரோடாவின் கருத்து, கட்சியின் கருத்தல்ல’ என்று மறுத்துள்ளது காங்கிரஸ்.

‘பரம்பரைச் சொத்துக்கு வரி’ என்பது அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருக்கும் நடைமுறைதான். இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி வருமானத்தை வைத்து, மக்களுக்கான நலத் திட்டங்களை இன்னும் சிறப்பாகச் செய்யமுடியும்.வருங்காலங்களிலாவது நாட்டின் செல்வங்களும் வளங்களும் சரிசமமாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றால், ஏழைகளுக்கும் செல்வந்தர் களுக்கும் இடையிலான இடைவெளி குறைய வேண்டும். அதற்கு, குறைந்தபட்ச ஊதியம் தொடங்கி பல விஷயங்களை திறந்த மனதோடு விவாதிக்க வேண்டும்.

கணக்கெடுத்துப் பார்த்தால், நம் நாட்டில் பற்பல கோடிகளை வைத்திருப்பவர் களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் மட்டுமே. ஆனால், மொத்த மக்கள் தொகை 140 கோடி. ஆக, அனைவருக்குமாக அனைவருமே சேர்ந்து சிந்திப்பதுதானே சரியாக இருக்கும்? ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த விஷயத்தையே ஒரு தரப்பு திரித்துப் பேசுவதும்… ‘அது கட்சியின் கருத்தல்ல’ என்று பதறிக்கொண்டு மறுதரப்பு மறுப்பதும் எந்த அளவுக்குச் சரி?

ஆகக்கூடி, ‘நாங்கள் சாதாரண மக்களின் பக்கமல்ல. எப்போதும் பணம் படைத்தவர்களின் பக்கமே’ என காங்கிரஸும் பா.ஜ.க-வும் அப்பட்டமாக ஒப்புக்கொள்வதையே அவர்களின் இந்தப் பேச்சுகள் உணர்த்துகின்றன!

– ஆசிரியர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.