நிறுவனத்திற்கென தனி ரூல்ஸ் இருக்கும். அதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், கூகுளில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
கூகுள் நிறுவன ஊழியர்கள் கடந்த இரண்டு நாள்களாக பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேலுடன் நெருக்கமாகப் பணிபுரிந்து, நிறுவனத்திற்கு எதிராக உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தியதற்காக ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு ஒரு நாள் கழித்து போராட்டங்களோடு தொடர்புடைய 28 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கூகுளின் தலைமை பாதுகாப்புத் தலைவர் கிறிஸ் ராகோவ் ஊழியர்களுக்குக் கடுமையான செய்தியை அனுப்பியிருந்தார்.
அதில், “ஒவ்வொரு பணியாளரும் பணியிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். பெரும்பான்மையான ஊழியர்கள் சரியானதைச் செய்கிறார்கள். கொள்கைகளை மீறும் நடத்தையுடையவர்களை கவனிக்காமல் புறக்கணிக்கிறோம் என்று நினைக்கும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், மீண்டும் சிந்தியுங்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
சுந்தர் பிச்சையின் எச்சரிக்கை செய்தி…
இந்தச் செய்திக்குப் பிறகு ஊழியர்களுக்குக் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சையும் எச்சரிக்கும் வகையில் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கூகுள் ஒரு துடிப்பான, திறந்த விவாதத்தின் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. இது அற்புதமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், சிறந்த யோசனைகளைச் செயலாக மாற்றுவதற்கும் உதவுகிறது. அதைப் பாதுகாப்பது முக்கியம்.
எவ்வாறாயினும், இறுதியில் நாங்கள் ஒரு பணியிடமாக (workplace) இருக்கிறோம். எங்கள் கொள்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தெளிவாக உள்ளன. இது ஒரு பிசினஸ், இங்கு சக பணியாளர்களைச் சீர்குலைக்கும் வகையில் அல்லது அவர்களுக்குப் பாதுகாப்பற்றதாக உணரும் வகையில் செயல்படுவது, நிறுவனத்தைத் தனிப்பட்ட தளமாக பயன்படுத்த முயற்சிப்பது அல்லது சீர்குலைக்கும் பிரச்னைகள் அல்லது அரசியலை விவாதம் செய்வது போன்றவற்றுக்கான இடமல்ல’’ என்று பதிவிட்டுள்ளார்.