உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவது வழக்கம். ஆனால் கடந்த முறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். அதனால் இம்முறை அத்தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மொத்தமுள்ள 80 தொகுதியில் 75 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் 73 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ரேபரேலி மற்றும் கைசர்கஞ்ச் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்களை பா.ஜ.க அறிவிக்கவில்லை.
சமாஜ்வாடி கட்சி உத்தரப்பிரதேசத்தில் 63 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் 61 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. பா.ஜ.க வின் ஸ்மிரிதி இரானி ஏற்கனவே அமேதி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி அமேதி மட்டுமல்லாமல் ரேபரேலி தொகுதிக்கும் வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது.
இரண்டு தொகுதியிலும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களது பெயர்களை காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை. இதனால் அங்கு யார் போட்டியிடப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் யாரை நிறுத்தப்போகிறது என்பதை பொறுத்து வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க முடிவு செய்துள்ளது. எனவே பா.ஜ.கவும் ரேபரேலி தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இத்தொகுதியில் முன்னாள் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.மனோஜ் பாண்டேயை நிறுத்துவது குறித்து பா.ஜ.க பரிசீலித்து வருகிறது. மற்றொரு முக்கிய தொகுதியான கைசர்கஞ்ச் தொகுதியும் இப்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
இத்தொகுதியில் தற்போது பா.ஜ.க சார்பாக எம்.பி.யாக இருக்கும் பிரிஜ் பூசன் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அத்தொகுதியில் மீண்டும் பிரிஜ் பூஷனை நிறுத்த பா.ஜ.க தயக்கம் காட்டி வருகிறது. பிரிஜ் பூஷன் மனைவிக்கு வாய்ப்பு கொடுப்பதாக பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை பிரிஜ் பூஷன் ஏற்க மறுத்துவிட்டார் என்றும் தகவல் வெளியானது.
இதனால் அங்கு யாரை நிறுத்துவது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளது. பா.ஜ.க வேட்பாளரை அறிவிக்காத காரணத்தால் சமாஜ்வாடி கட்சியும் இத்தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது. பிரிஜ் பூசனுக்கு பதில் வேறு ஒரு வேட்பாளரை பா.ஜ.க அறிவிக்கும் பட்சத்தில் பிரிஜ் பூசனை தங்களது கட்சி வேட்பாளராக அறிவிக்க சமாஜ்வாடி கட்சி முடிவு செய்து காத்துக்கொண்டிருக்கிறதாகவும் ஒரு தகவல் உள்ளது. பிரிஜ் பூஷன் எப்படியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார். பிரிஜ் பூஷனுக்கு வாய்ப்பு கொடுக்காத பட்சத்தில் அருகில் உள்ள 4 தொகுதியில் அதன் தாக்கம் இருக்கும் என்று பா.ஜ.க கருதுகிறதாம்.
எனவே இவ்விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாத நிலையில் பா.ஜ.க இருக்கிறது. இது குறித்து பிரிஜ் பூஷனிடம் கேட்டதற்கு, `கடவுளுக்குத்தான் தெரியும்’ என்று கூறிவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியும் ரேபரேலி மற்றும் கைசர்கஞ்ச் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்கிறது. இதனால் இத்தொகுதிகள் அனைவர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் வடமத்திய மும்பை தொகுதிக்கு பா.ஜ.க இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இத்தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் பூனம் மகாஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க பா.ஜ.க தயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் இத்தொகுதிக்கு வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY