மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது! – இடம்: சென்னை
2024 மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசியல் கட்சிகள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்த ஜனநாயகப் பெருவிழாவில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முதற்கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவை எதிர்கொள்கின்றன. தமிழ்நாட்டில் நேற்று மாலை ஆறு மணியோடு தேர்தல் பரபர பிரசாரங்கள் ஓய்ந்தன. தேர்தல் நடத்தைகள் அமலில் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவைத் தடுக்க தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு (அருணாச்சலப் பிரதேசம் – 2, அஸ்ஸாம் – 5, பீகார் – 4, சத்தீஸ்கர் – 1, மத்தியப் பிரதேசம் – 6, மகாராஷ்டிரா – 5, மணிப்பூர் – 2, மேகாலயா – 2, மிஸோரம் – 1, நாகாலாந்து – 1, ராஜஸ்தான் -12, சிக்கிம் – 1, தமிழ்நாடு – 39, திரிபுரா – 1, உத்தரப்பிரதேசம் – 8, உத்தரகாண்ட் – 5, மேற்கு வங்கம் – 3, அந்தமான் & நிகோபார் தீவுகள் – 1, ஜம்மு – காஷ்மீர் – 1, லட்சத்தீவு – 1, புதுச்சேரி -1)
நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். 102 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 68,320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
அவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 45,000 சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 8,050 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா… எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும்… அந்தச் சாவடியில் வாக்களிக்க வேண்டிய குறிப்பிட்ட பாகத்தின் எண் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்—->>> https://electoralsearch.eci.gov.in/