திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் திட்டமிடப்பட்டிருந்த பா.ஜ.க பொதுக் கூட்டத்துக்கு, பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். உள்ளூர் பா.ஜ.க-வினரின் உற்சாக வரவேற்போடு, மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றத் தொடங்கினார் மோடி.

பிரதமர் மோடி – நெல்லை பாஜக பொதுக்கூட்டம்

அப்போது பேசுகையில், `பா.ஜ.க-வுக்கு மக்களிடம் கிடைக்கும் ஆதரவைக் கண்டு இந்தியா கூட்டணியின் தூக்கம் தொலைந்து விட்டது. கடந்த 10 வருடங்களாக பா.ஜ.க அரசு கடுமையாக உழைத்து ஏழை மக்களுக்குப் பல நல்ல திட்டங்களை அளித்திருக்கிறது. தென் மாநிலங்களுக்கு வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்யப்பட்டது போல, நெல்லைக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பிரதமர் மோடி – நெல்லை பாஜக பொதுக்கூட்டம்

பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 1.25 கோடி வீடுகளுக்கு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸும், தி.மு.க-வும் செங்கோல், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரியத்தை அழிக்க முயற்சி செய்கின்றன. தமிழ் மொழிக்கு உலக அளவில் அங்கீகாரத்தை வாங்கி தர பா.ஜ.க நடவடிக்கை எடுக்கும். வ.உ.சி காட்டிய வழியால் பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் கனவுகளை பா.ஜ.க முன்னெடுத்துச் செல்கிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு தி.மு.க எத்தகைய அவமானத்தை ஏற்படுத்தியது என்பதும் உங்களுக்குத் தெரியும். அத்துடன், காங்கிரஸும், தி.மு.க-வும் காமராஜரை அவமானப்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விஷம் கடுமையாகப் பரவியிருக்கிறது. போதைப்பொருள் விற்பவர்கள் யார் என்பதும், அவர்கள் யார் துணையுடன் விற்கிறார்கள் என்பதும் உங்களுக்கே தெரியும். எனவே, தமிழ்நாட்டில் போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க நான் சபதம் ஏற்கிறேன்.

பிரதமர் மோடி – நெல்லை பாஜக பொதுக்கூட்டம்

தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் மக்களை நேசிக்கும் கட்சி பா.ஜ.க. ஆனால், தேசத் துரோகச் செயல்களை தி.மு.க-வும் காங்கிரஸும் செய்து வருகின்றன. இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை ரகசியமாக வெளிநாட்டுக்குக் கொடுத்து விட்டார்கள். அதன் காரணமாக நமது மீனவர்கள் நிறைய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள். நமது நாட்டை 2047-ல் தன்னிறைவு பெற்றதாக மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. அதற்காக 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறேன்.

பிரதமர் மோடி – நெல்லை பாஜக பொதுக்கூட்டம்

நெல்லை தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், குமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தென்காசியின் ஜான் பாண்டியன், தூத்துக்குடியின் ஜெயசீலன், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் ஆகியோரை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்காகவும், எனக்குத் துணையாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் நான் பங்கேற்கும் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இது என்பதால், நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று உரையாற்றினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.