2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள். இதில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இதனால், நாடு முழுதும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றிவருகிறது. இந்த நிலையில், சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிலான பணத்தை, இந்திய தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்திருக்கிறது.
அதுவும், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விட அதிகமாக, இந்தத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, 2019 தேர்தலின்போது மொத்தமாகவே ரூ.3,475 கோடிதான் இந்திய தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பாகவே ரூ.4,650 கோடி பணமாகவும், பிற பொருள்களாகவும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையானது 2019 தேர்தலை விட 34 சதவிகிதம் அதிகம்.
மாநில வாரியாகப் பார்க்கையில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் ரூ.778.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கடுத்தபடியாக, குஜராத்தில் ரூ.605.33 கோடி, தமிழ்நாட்டில் ரூ.460.8 கோடி, மகாராஷ்டிராவில் ரூ.431.3 கோடி, பஞ்சாப்பில் ரூ.311.8 கோடி, டெல்லியில் ரூ.236 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், `2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாட்டின் 75 ஆண்டுக்கால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பறிமுதல்கள் பதிவாகியிருக்கின்றன. மார்ச் 1ம் தேதி முதல் தினமும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
பறிமுதல் செய்யப்பட்டவைகளில், பணம், மதுபானம், போதைப் பொருள்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் பிற இலவசங்கள் அடங்கும். இவை, தேர்தலை முறைகேடுகள் எதுவும் இல்லாமல் நடத்துவதற்கும், சமநிலையை உறுதி செய்வதற்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தீர்மானத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், தீவிரமான கண்காணிப்பு, சோதனை ஆகியவை தூண்டுதலற்ற தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதற்கான மையமாக இருக்கின்றன. பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள், எல்லை சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் தீவிரமாகச் செயல்பட்டு பறிமுதல் செய்துவருகின்றன’ எனத் தெரிவித்திருக்கிறது.